Friday, February 25, 2011

ஈர்ப்பு விசைகள்

நமது உடலில் மின் தன்மை அறிவாகவும், காந்த தன்மை உணர்வாகவும் செயல்பட்டு வருகிறது. நிற்க!

முன் கட்டுரையில், - உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.- என பார்த்தோம்.

நாம் புவிஈர்ப்பு விசையில் கட்டுண்டு பூமியோடு சார்ந்து செயல்படுகிறோம். நமது உடல் மீது புவிஈர்ப்பு விசையும், சூரியனின் ஈர்ப்பு விசையும், மற்றும் கோள்களின் ஈர்ப்பு விசைகளும் செயல்படுகிறது.

இதில் நம் மீது வலுவாக செயல்படும் விசை புவிஈர்ப்பு விசையே.( ஆனால், பூமியே சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டுத்தான் சுற்றுகிறது.) இன்னும் உடுமண்டல ஈர்ப்புவிசைகளும் இருக்கின்றன. இத்தனை விசைகளும் நமது காந்த புலன்மீது செயல்படுவதாலே இவ்வியக்கங்கள் நமக்கு உணர்வாக துலங்குகிறது.

இந்த உணர்வு தன்மையை நாம் தியான நேரத்தில் அதிர்வு தன்மையாக மாற்றுவதற்கு , நமக்கு வெளியிலிருந்து, நம்மை ( பூமியை ) நோக்கி ஈர்க்கும் சூரிய ஈர்ப்பு விசையை நாம் நமக்கு உள் வாங்க வேண்டும். அதாவது நமது உடலிலுள்ள செல்களின் கனம் ( weight ) பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு,ஒரு கிறக்க நிலையில்( சுருண்டு ) கீழ் நோக்கியே செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த செல்களை மேல்நோக்கி ,விழிப்பாக ( OPEN ) புவிஈர்ப்புக்கு எதிராக செயல்பட வைக்க முடிந்தால் உணர்வு நிலை அதிர்வு நிலையாக மாற்றமடையும். ( இதனாலேயே தியானத்தில் அமரும் முன் நமது உடல் நேரடியாக பூமியின் மீது படாமல் எதாவது மரப்பலகையையோ , அல்லது எதாவது மொத்த துணிகளையோ ஆசனமாக அமைத்து அதன் மீதே அமருகிறோம்.) நமக்கு முன் வந்த மகான்களும் புவிஈர்ப்பு விசை குறைவாக செயல்படும் இடங்களான மலை உச்சி , அல்லது மிக உயரமான மலைப்பிரதேசம் ( இமயமலை ) போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர்.

இனி இந்த ஈர்ப்பு விசைகள் நம்மீது எப்படி செயல்படுகின்றன என்பதை பார்ப்போம்.

புவி ஈர்ப்பு விசையே நம் மீது அதிக வன்மையுடன் இயங்குகிறது. நாம் பூமியின் மிக அருகில் பூமியோடு ஒட்டியே இருப்பதால் நம் மீது வன்மையாக செயல்படுகிறது. ஒரு பொதுவான பிரபஞ்ச ஈர்ப்பு விசையானது நம் மீது ஒரு சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிகிறது. பூமியின் நேரடியான ஈர்ப்பு விசையான - சூரிய ஈர்ப்பு விசை- கூட நம் மீது அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த ஈர்ப்பு விசைகள் நம் உடலின் எந்த பகுதியை மையப்படுத்துகிறது என கவனித்தால் தெரியும் , அது நமது முதுகு தண்டேயாகும்.

முதுகுத்தண்டை செங்குத்தாக நேராக நிறுத்தி வைத்தால், வெளியிலிருந்து வரும் சூரிய ஈர்ப்புவிசை நமது உச்சந்தலையில் துவங்கி நேராக கீழிறங்கி முதுகு தண்டு வழியாக, முதுகு தண்டின் நுனியை நோக்கி பிரவேசிக்க முயல்கிறது தெரிய வரும். ( இத்தனை வகை உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே முதுகு தண்டை நேராக நிமிர்த்தி வைக்கும் திறமை இருக்கிறது, காண்க ! )

நீங்கள் தியானத்தின் போது உங்கள் உணர்வின் மீது தியானித்து உணர்வின் அசைவ்களை குறைத்துக்கொண்டே வந்தால் அது சிற்றசைவாக, அதிர்வாக உங்கள் முதுகு தண்டின் நுனியான மூலாதாரத்தில் நின்று அனைத்து செல்களையும் மேல்நோக்கி அதிர வைத்தால், அந்த சூரிய ஈர்ப்பு விசை,உச்சந்தலையிலிருந்து கீழிறங்கி முதுகு தண்டின் வழியாக மூலாதாரத்துக்கு ஓடி வரும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது உங்கள் தேகமே ஒளிப்பிரவாகமாகும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையில் செயல்படும் பொழுதே மனம்,மற்றும் உணர்வு செயல்படும்.
சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது மனம் ஒளியாகவும், உணர்வு அதிர்வாகவும் செயல்படுவதை காண்பீர்கள்.

முன்பு பூமியின் ஈர்ப்புவிசையில் உங்கள் மூளை செயல் புரிந்ததற்கும் , இப்போது சூரிய ஈர்ப்பு விசையில் உங்கள் மூளை செயல் புரிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது உங்கள் உடலிலுள்ள செல்கள் சராசரியாக இருக்கும்பொழுது உங்கள் மூளை செயல்பட்டதிற்கும், இப்போது செல்கள் மேல் நோக்கி இருக்கும்பொழுது செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசம் அது.

இப்போது உங்கள் உடலின் தகவமைப்பே தலை கீழாக மாறி செயல் படுவதை அறிவீர்கள்.

அநுபூதி நிலையில் தொடர்ந்து நீடிக்கும் மகான்களின் நடை முறை நடத்தைகள் வித்தியாசமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

No comments:

Post a Comment