Monday, January 31, 2011

"எங்கும் நானே! எல்லாம் நானே!".

மூன்றுவித தன்மை நம்மில் செயல்படுகிறது. 1,( memory ) கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு கிடங்குகளில் பயணித்து , உங்களுக்கு ஏதுவானதை தீர்மானித்து , உங்களுக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என உங்கள் பழைய புராணங்களை, உங்கள் சரித்திரத்தை புரட்டிப்பார்த்து உங்களை இன்னும் இந்த பூமியில் தக்க வைத்திருப்பது , உங்கள் பூரண ஆயுளுக்கு வழி நடத்தும் 'மனம்' ஒன்று. ஓய்வும் கிடையாது.இது தன்னை சுயமென எண்ணிக்கொள்வது. இதற்கு உங்கள் ( இரண்டாவது தன்மையான ) உணர்வை மாற்றியமைக்கும் திறன் உண்டு.

2, ( live ) வாழ்வோடு மிக நேரடியாக தொடர்பு கொண்டு ( ரத்தமும் சதையுமாக ) சுக, துக்கங்களில் கலந்து வாழும் தேக உணர்வு மற்றொன்று.இது மிக உயிர்ப்பானது. இதற்கு இக்கணம் மட்டுமே. இந்த உணர்வில் நீங்கள் விழிப்புணர்வோடு நீடித்து லயிக்க முடிந்தால் ( உங்கள் மூன்றாவது தன்மையான அநுபூதி தன்மைக்கு வாசற்படியாக அமையும்.

3,( absolute ) இது பரிபூரண தன்மை வாய்ந்தது. காலம் எனும் கருத்தால் இது நிலையான காலம் என வருணிக்கலாம். அனைத்தும் இதனுள் அடக்கம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் இதிலிருந்தே தோன்றி மறைகிறது. முன் கூறிய மன எண்ணங்களையும், உடல் உணர்வையும் கடந்து இதில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. முன் கூறிய இரண்டையும் விட்டு விட்டாலே நீங்கள் இங்குதான் இருப்பீர்கள். நமது மூல இருப்பே இங்குதான். நமது மூல இருப்பு மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பும் இதுதான். இதற்கு எல்லையே இல்லை. இதில் நிலைக்கும் உங்களுக்கும் எல்லையே இருக்காது.

இதுதான் கிருஷ்ணா சொன்ன "எங்கும் நானே! எல்லாம் நானே!".

விழிப்புணர்வு என்பது பற்றிய ஒரு தகவல்.

ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் நேரடியாக திகழ்கிறது. அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். “

நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும்.” என நாம் கவனித்தோம்.

உணர்வின் ஆழத்துக்கு நாம் போகும்பொழுது இக்கணம் மட்டுமே மிஞ்சி இருப்பதை காண்போம்.

இங்கு மனம் செயலற்று, ஒரு சாட்சித்தன்மையோடு மட்டுமே செயல்படும். மனம் செயல்பட, கால அவகாசம் தேவை. இக்கணம் எனும் குறுகலான கால இடைவெளியில் மனம் செயல்பட முடியாது. இவ்விடைவெளியில் உணர்வு மட்டுமே தன முழு பூரண தன்மையுடன் செயல்படும்.

மனம் – கடந்த, இறந்தகால நினைவுகளில் மட்டுமே ஈடுபட முடியும். அது உயிர்ப்புள்ள இக்கண நிகழ்வில் நேராக பங்கு ஏற்க முடியாது. மனதிடம் ஓர்மை கிடையாது. அது பல்நோக்குடையது. சந்தேகிப்பது. அதுஆராயும் தன்மையுடையது.

உணர்வால் மட்டுமே நேரடித்தொடர்பு கொள்ளமுடியும். அது ஒர்மையுணர்வு உள்ளது. அதற்கு பல்நோக்கு கிடையாது. அதற்கு எதையும் ஆராயும் விருப்பம் கிடையாது. சந்தேகம் கிடையாது. மிக நெருக்கமான நேரடியானது.

இதையே 'விழிப்புணர்வு' என சொல்லப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது உணர்வால் மட்டும் இக்கணத்தை, இருப்பை நுகர்வது. இக்கண உணர்வையே முன்னோர்கள் 'விழிப்புணர்வு' என சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் உணர்வால் இக்கணத்தில் இருங்கள்.

இப்போது இருப்புணர்வைத்தவிர வேறெதுவும் இருக்காது. அ

துவே விழிப்புணர்வு.

அந்த விழிப்புணர்வே அநுபூதி நிலைக்கு வாசல்.

Wednesday, January 26, 2011

காலம் பற்றிய கருத்துக்கள்.

நமக்கு காலம் பற்றிய மூன்றுவிதமான கருத்துக்கள் உள்ளன. அவை முறையே

1, கடந்த காலம்,

2, நிகழ்காலம்,

3, நிலையான காலம்.

நாம் இதுவரை அறிந்திருப்பது இரண்டு மட்டுமே. ஆமாம் இந்த மூன்றாவதான நிலையான காலம் பற்றி நமக்கு அவ்வளவாக புரிதல் இல்லை. நாம் இன்னும் அங்கு பிரவேசிக்க்கவுமில்லை.

முதலாவதான கடந்தகாலம் நமது மனதில் நடக்கிறது. அவை இறந்த காலங்களின் நினைவுகள். ( மெமரி ) இவற்றை நமது மூளை செயல்படுத்துகிறது. கடந்த நொடிக்கூட இறந்த காலம்தான்.

இரண்டாவதான நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும். இக்கணத்தை, மனதாலாகிய அறிவு அதை தனது சோதனைக்கு உட்படுத்துவதற்க்குள் காலம் கடந்து விடுகிறது.நிகழ கணம் இறந்த கணமாகிவிடுகிறது.

அறிவு எதையும் சோதித்த பின்னரே ஏற்றுக்கொள்ளும்.

உணர்வு நேரடியானது.

மனம் சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொள்வது. மனதிற்கு சேமிப்பு உண்டு.

உணர்வுக்கு சேமிப்பு இல்லை.

உங்களுடைய 'நான்' கடந்த கால, இறந்த கால சவமாகி நாறிப்போன போன அந்த குப்பைகளின் சேமிப்பு கிடங்கிலேயே கால் ஊன்றி நிற்கிறது. உங்களுடைய 'நான்' தூக்கியெறியப்பட்ட குப்பைகளின் மீது அமர்ந்து அங்கு அழுகி, நாறிக்கிடக்கும் பொருட்களை அசைப்போட்டு உயிர்வாழும் நரி.

ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் திகழ்கிறது.

அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலமே அனுபவிக்க முடியும்.

மனதால் அதை அணுகக்கூட முடியாது.

Saturday, January 22, 2011

உணர்வின் செயல்தன்மை.

உணர்வுக்கு சுயம் இல்லை . சுயம் என்பது நினைவுத்தன்மை (memory)உள்ளதற்கு மட்டுமே உண்டு. உணர்வு என்பது நிலையான ஓன்று அல்ல! அது தொடர்ந்து மாறி, மாறி நடப்பது. கணத்துக்கு கணம் மாறுவது.

ஒரு வலியுணர்ச்சி ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்த உணர்ச்சியில் பலவித மாற்றங்கள் உண்டு. கணத்துக்கு கணம் அது மாறுகிறது. அந்த பலவிதங்களை ஒன்றாக்கி ஒரே வலியாக உங்களை உணர வைப்பது உங்கள் அறிவாகிய உங்கள் மனம்தான்.

உணர்வு பின்னமானது. முழுமையானது அல்ல. அந்த பின்னங்களை கூட்டிக்கூட்டி முழுமையாக்குவது உங்கள் மனம்தான்.

தவிர, உணர்வுக்கு பேதமில்லை. உணர்வு பேதங்களை கற்பிப்பது உங்கள் மனமே!

அனால் உணர்வே உங்கள் வாழ்வோடு நேரிடை தொடர்ப்பு உள்ளது.

அதற்கு நேரிடையாக இருப்பதை உணர மட்டுமே தெரியும்.

மிக முக்கியமான விஷயம் : உணர்வுக்கு நேற்று, இன்று, நாளை எனும் மூன்று காலங்கள் இல்லை.

இருப்பது இந்த கணம் மட்டுமே!.

மனமல்ல! உணர்வுதான் நீங்கள்.

மனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது.

மனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை.

மனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும்.

மனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது .

ஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது.

மனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும்.
உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை.

ஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான்.
மனமல்ல!

உணர்வுதான் நீங்கள்.

Thursday, January 20, 2011

பெற வேண்டியது எதுவுமில்லை. விட வேண்டியது அறியாமை மட்டுமே!.

நாம் மூன்று வித தன்மையில் இருக்கிறோம். ஒன்று :எண்ணங்களாகிய மனம். . இரண்டு: அனுபவித்தலான உணர்வு. மூன்று : அனைத்தையும் உள்ளடக்கிய( முற்றுணர்வு,முற்றறிவான ) பூரண நிலை.
இம்மூன்றும் ஒன்றாக இப்போது சேர்ந்து இயங்குகிறது. சராசரியாக இப்படித்தான் அனைவரும் இருக்கிறோம். இந்த மூன்றையும் பகுத்து அறிய, உணர நம்மால் முடிந்தால் நாம் நம்மை அறிந்தவராவோம்.

இந்த மூன்றும் கூட ஒரு அணுவைபபோன்று முத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

அணுவில் உள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மூன்றும் தனிதனித்தன்மையதாக இருக்க காண்கிறோம்.
எதிர்மின்-எலெக்ட்ரான், நேர்மின்-புரோட்டான், நிலைமின்-நியூட்ரான்.மின்னோட்டத்தின் மூன்று வித தன்மைகளாக இவைகள் இருக்கின்றது.

இவைகளும் முறையே நம்மில் எதிர்மின்-எலெக்ட்ரான்( வெளிநோக்கிய ) மனமாகவும்,, நேர்மின்-புரோட்டான்( தன்னையே நோக்கிய- தன் ) உணர்வாகவும், நிலைமின்-நியூட்ரான் (ஏக அறிவாகவும், ஏக உணர்வாகவும் ஒருங்கிணைந்து - முழுமையானதாக, பூரணமானதாக - ) பரிபூர்ண நிலையாக இருக்க காண்கிறோம்.

இதில் இரண்டு நிலைகள் அறியாமையை கொண்டுள்ளன. ஒன்று:மனம், மற்ற ஒன்று உணர்வு, ( அறியாமையான இரண்டும் ,ஓர் 'முழுமை'யாக(complete ) இல்லாது முழுமையின் 'பகுதிகளாக' இருப்பதால் தான் அறியாமையில் இருக்கின்றது.முழுமையடையாதது அறியாமை. முழுமையானது அறிவு. )

( குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது.)

இவைகளே முறையாக 'நான்'எனும் மனம், தான் எனும் உணர்வு. இவை இரண்டுமே!

இந்த மனம் எனும் அறியாமையும், உணர்வு எனும் அறியாமையும் நம்மை விட்டு நீங்கினால்!( நான், எனது எனும் அறியாமையை விட்டு நீங்கினால் )நாம் அந்த பரிபூர்ண நிலையை காண்போம்.

ஒரு அணுவினில் என்ன நிகழ்கிறதோ ! அதுவேதான் நம்மிலும் நிகழ்கிறது.

ஆக! நாம் தியானத்தின் மூலம், யோகாவின் மூலம் , அல்லது குருவின் மூலம் - வெளியிலிருந்து - நாம் 'பெற'வேண்டியது எதுவுமில்லை. நாம்- நம்மிடமிருந்து - 'விட' வேண்டியது, நம் அறியாமையை மட்டுமே. அறியாமையை விட்டாலே! பரிபூர்ண நிலை வாய்க்கும்.
நமக்கு வெளியிலிருந்து பெறவேண்டியது எதுவுமில்லை, விடவேண்டியது மட்டுமே நம்மிடம் இருக்கிறது.

ஓம் பூர்ணமத; பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவ சிஷ்யதே.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

Thursday, January 13, 2011

நான் என்கிற தன்முனைப்பு மனதால் உண்டானதா? அல்லது உணர்வால் உண்டானதா?

இந்த கேள்வியை மட்டும் உங்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்களே யோசித்து பதிலை கண்டு பிடியுங்கள்.

Friday, January 7, 2011

இந்த வாழ்க்கையை நுகர்வோன் யார்?

நாம் எல்லோரும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையை நுகர்வோன் யார்? சற்றும் தயங்காமல் " நான்தான் ' என்று சொல்லுகிறோம். உங்கள் வாழ்க்கையை நுகர்வது நீங்கள்தான். இன்னும் சற்று கூர்ந்து கவனமாக பாருங்கள். நுகர்வது உங்கள் மனமா?, உங்கள் உணர்வா? - உங்கள் எண்ணங்களா? உங்கள் உணர்வா?

இந்த வாழ்வை, வாழ்வின் விபரங்களை மனதால் அறியத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. ( அறிதல் என்பது நுகர்தல் ஆகாது ) ஆக! உணர்வுதான் இந்த வாழ்க்கையை நுகர்கிறது. அதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்காது.

இந்த உணர்வு சுயத்தன்மையுடையதா? அல்லது மனம் சுயத்தன்மையுடையதா?

மனம்தான் சுயத்தன்மையுடையது என்பது நமக்கு தெரியும். அது சுயமானதாக இருப்பதால்தான், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணுகிறோம்,மனதில் எழும் எண்ணம்தான் நமது நடத்தையை மாற்றுகிறது. ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். இது நமது சுயத்தை திருத்தி செய்ய.

ஆக! மனம் சுயமுடையது. இதைத்தான் 'நான்' என்று கூறுகிறோம். நான் என்பது மனதின் செயற்பாடு.
உணர்வுக்கு சுயத்தன்மை கிடையாது. ஏனெனில் அதற்கு நினைவுத்தன்மை ( மெமரி ) கிடையாது. நினைவுத்தன்மையற்ற ஒன்று சுயமாக இருக்க முடியுமா?

உணர்வுஎன்பது அவ்வப்போது ( கணத்துக்கு கணம் ) உணர்ந்து விடுதல் அவ்வளவே!

ஆமாம் இந்த உணர்வு இடத்தில்தான் உங்கள் வாழ்வே நுகரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள் இந்த வாழ்க்கையை நுகர்வது யார்? சுயமுள்ள மனமா? சுயமற்ற உணர்வா?

தன்னையறிதல்

தன்னையறிதல் என்பது - தன்னை- இது என்ன? இது எப்படி செயல்படுகிறது? இந்த 'நான்' என்பது யார்? என்னை 'நான்' என்று எவ்விதம் அறிந்திருக்கிறேன்? இதன் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? இந்த 'நான்' எப்போது துவங்கியது? இது மாதிரி இன்னபிற கேள்விகளும் உங்களுக்கு உதித்தால்! - இந்த தன்னையறிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்கலாம்.

நமது வாழ்வு அகப்பரிமாணம், புறப்பரிமாணம் என நமது கவனக்குறைவால் இருவித பரிணாமமுடையதாக பிரிந்து கிடக்கிறது. வாழ்வும் இப்போது அக வாழ்வு, புறவாழ்வு என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. நமது புற வாழ்வை நமது மனம் பராமரித்து வருகிறது. நமது அக வாழ்வை நமது உணர்வு பராமரித்து வருகிறது. புறவாழ்வை மனம் பராமரித்து வந்தாலும், அதன் சாராம்சத்தை நமது உணர்வே எடுத்துக்கொண்டு வாழ்கிறது. ஆக! புறவாழ்வின் பயனும் நமது அகவாழ்விலேயே உணரப்பட்டு, வாழ்வின் மகத்துவமே அகவாழ்விலேதான் அடங்கிக்கிடக்கிறது என்பது கண்கூடு.

ஆக! ஒரு மனிதன் தன்னையறிய விரும்பினால் தனது உணர்வுகளை அறிதல் வேண்டும். உடம்பு எனும் ஸ்தூல செயல்பாட்டினை நிறுத்தி, ஐம்புலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி, மனதின் காட்சி பிம்பங்கள், மனதின் மொழி பிம்பங்களையும் , { மனதையே ) நிறுத்தி- படர்ந்து விரிந்து முரண்பட்டு அலையும் உணர்வையும் ஒரு பூஜ்யத்துக்கு கொண்டுவந்து,

உணர்வை ஒரு புள்ளியில் நிறுத்த

( எல்லா விருத்திகளும் அடங்கி ) உணர்வு ஒரே ஏக உணர்வாக மலரும். அந்த ஏக உணர்வு பூரணமானதாக இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்த பூர்ணம் அது.- 'தான்' -என்பதுவும் அதுவே! தன்னையரிதலும் இப்படியே!