Tuesday, December 27, 2011

முகவரியை கொடுத்து உதவுங்கள்.

இந்த வலைப்பதிவில் தலைப்பு மட்டும் போட்டு விட்டு பிரசுரிக்காத கட்டுரைகளையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளேன். இந்நூலை பெற்றுக்கொள்ள உங்கள் மெயில் முகவரியை கொடுத்து உதவுங்கள்.

Saturday, December 24, 2011

அறிவியல் ஆன்மீக புத்தகம்

























இந்த பிளாக்கில் தலைப்பு மட்டும் போட்டு விட்டு கட்டுரை எதுவும் போடவில்லை. அவை யாவும் இப்போது முழு புத்தகமாக இலவசமாக நீங்கள் இறக்கிக்கொள்ளலாம். உங்கள் நண்பருக்கும் சொல்லுங்கள். டவுன்லோட் லிங்க் :

http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf

படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். 9994852986

தமிழ் புத்தகம்

வெளிப்பட்டது எனும் ஆன்மீக அறிவயல் புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் :

http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf

Sunday, June 19, 2011

தாவோ -1

விளிம்பு வரை நிறைந்திருக்கும் கிண்ணத்தைப்

பிடித்துக்கொண்டே இருப்பது கடினம்.

அதை அப்படியே இருக்க விடுவது நல்லது.

Friday, April 29, 2011

ஒரு தகவல்.

இந்த மனிதகுல சமூகத்திற்கு ஒரு தகவலை இப்போது கொடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
இந்த உணர்வு உடல், பிராண உடல் மன உடல் தொடர்ந்து பூரண உடல் மற்றும் இணைப்பு உடல் இறுதி நிலையான திவ்ய உடல் என இறுதி நிலை வரை பயணித்த , அந்த நிலைகளை உணர்ந்தவர்கள் அதை சில கணங்கள் உணர்ந்ததாலேயே அதை அடைந்துவிட முடியாது.
தொடர்ந்து நித்தம் தியானத்தின் வழியாக அதை உணர்ந்து வருதல் என்பது ஆரம்ப நிலை.
க்ஷணம் தவறாது இதில் நிலைத்தவர்கள் மகான்கள் எனப்படுபவர்கள்.
தொடர்ந்து பயிற்சியிலிருப்பவர்கள் எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு ஒரு உபாயம் உண்டு.
அந்த திவ்ய தேகத்தை உணர்ந்தவர்கள் நீண்ட நாட்கள் இந்த ஸ்தூல ஆதார வாழ்வை வாழ விரும்ப மாட்டார்கள். எவ்வளவு விரைவாக இந்த ஸ்தூல வாழ்வை உதறி விட வேண்டுமோ அவ்வளவு விரைவாக உதறி விடுவர்.
ஒரு உதாரணம் இதற்கு பொருந்தும் என பார்க்கலாம். அதாவது நூறு சதவிகிதம் அந்த இறுதி நிலையை அடைந்து விட்டவர்கள் சதாசிவ பிரம்மேந்திரர், அக்கம்மாதேவி, சமண மதத்தை சேர்ந்த திகம்பரர்கள்.
இவர்கள் யாவரும் தமது ஸ்தூல தேக உணர்வேயில்லாது மழலை போல திரிந்தவர்கள். இந்த ஸ்தூல தோற்ற உலகத்தைப்பற்றியும் அக்கறை கொள்ளாதவர்கள்.
இன்னும் சிலரை பார்த்தால் அந்த சதவிகிதம் குறையும். அந்த இறுதி நிலையான திவ்ய தேகத்தில் முற்றும் பொருந்தாது குறைவுற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த குறைவு எதனால் ஏற்படுகிறது என கவனித்தால், இந்த உயிரணு தோன்றி பல்லாயிர பிறவி கண்டு பலகோடி அனுபவம் கண்டு வளர்ந்து வந்துள்ளது. பொருளுலகு சார்ந்த இந்த 'நான்'. இது பெருங்காய டப்பா மாதிரி உள்ளே காலியாக்க முடிந்தாலும் வாசம் போக்க முடியாதவர்கள் இவர்கள். இந்த ஸ்தூல தன்மைக்கும் சூட்சும தன்மைக்கும் இடையான தடுமாற்றம். இது,அவர்களது போதனைகளில் தெரியும். இது தூய உண்மையை அறிவு நிலைகளில் தெளிந்தவருக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது.
அவர்கள் எத்தனை சதவிகிதம் இந்த பௌதிக உலகில் கவனம் வைத்திருக்கிறார்களோ அத்தனை சதவிகிதம் அவர்களிடம் வேறு ஒரு நோக்கம் இருக்கிறது என கண்டுபிடித்துக்கொள்ளுங்கள். திரு ராமகிருஷ்ணர் யாராவது அன்பர்கள் காசைக்கொடுத்தால் அதை வீசி எறிவாராம். இதற்கு அவர் அப்பொழுது வறுமை நிலையில் இருந்த நேரம்.
இது ஒரு புறமிருக்க
ஒரு துளிக்கு கடல் என்றால் என்னவென தெரியாத அறியாமையின் போது, "தனக்கு ஒரு 'தனி' தன்மையுள்ளது. மற்ற எந்த துளியை விடவும் நான் வித்தியாசமானவன், உருவத்திலும், நிறத்திலும், உள் அமைப்பிலும், குணத்திலும்,அறிவிலும் அனைத்திலுமே மற்றவரிடமிருந்து நான் வேறுபட்டவன். நான் நிகரற்றவன்" என தன்னைப்பற்றி கருத்து கொண்டுள்ளது. எப்போதாவது குளம், குட்டை, ஓடை என காணும்பொழுது சற்று மிரட்சி அடைந்தாலும், பழக்க தோஷத்தால் இந்த தன் பிரபாவம் குறைவதில்லை. என்றாவது ஒரு நாள் ஆர்ப்பரிக்கும் கடலை காண நேரும்பொழுது மட்டுமே இந்த துளி தன்னை அறிந்து தன் மூல நிலை அறிந்து தன் தகவமைப்பை அறிந்து நான் தனியல்ல! என்னை சூழ கடல் இருக்கிறது. என்னைக்கடலில் விட்டு விட்டால், நான் எனும் துளி காணாது போய் இந்த துளியும் கடலாகிவிடும் எனும் ஏக உணர்வு தோன்றி தன்னை கடலில் சேர்த்து கடலோடு இணைந்து விடுதலே அந்த துளியின் ஆன்மீக வரலாறு.
இனி அந்த துளி பேசுமா? சதாசிவ பிரம்மேந்திரா, சமண திகம்பரர்கள் துளியாக இருந்து கடலாக மாறியவர்கள். என்று மாறினார்களோ அன்றே துளியின் கதை முடிந்து விட்டது.
துரதிர்ஷ்டமாக நமக்கு நிறையவே ஞானவான்களும், மகரிஷிகளும்,ஏன் அவதாரங்களும் கூட கிடைத்தார்கள். இந்த துளிகளெல்லாம் தங்களை கடலில் கலக்க விட்டு அந்த கடலே 'நான்' என ஆரம்பித்து விட்டார்கள். அது நானே! இது நானே! நானே அதுவாயிருக்கிறேன்! நானே இதுவாயிருக்கிறேன் இப்படி ஏகப்பட்ட வசனங்கள்.
சமீப காலத்தில் கூட ரமணர் போன்ற சிலர் அன்பர்கள் அந்த அநுபூதி நிலைக்கு வரவேண்டிய உதவிகளை மட்டுமே தன்னை தேடி வந்தவர்களுக்கு அருளினார்கள்.
எவரெல்லாம் மீண்டும் அந்த 'நான்' ஐ விட முடியாமல் செயல்பட்டார்களோ, செயல்படுகிறார்களோ அவர்களை நீங்கள்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
இந்த ஸ்தூல நிலைக்கும் அந்த சூட்சும நிலைக்கும் இடையான தடுமாற்றமே இந்த புதுவித நான் உருவாவதற்கு காரணம். இந்த தடுமாற்றத்தில் தடுக்கி விழுந்த சாமிகள் ஏராளம். இதிலும்கூட ஒரு சூட்சும பிரச்னை இருக்கிறது அதையும் நேரம் வரும்பொழுது எழுதுவோம்.
எல்லாவற்றையும் உதறிய பின்பே அறுதி நிலை வாய்க்கும் என்பது சத்தியம். இடையில் சில நோக்கங்களுக்காக சிலர் தங்களை கடவுளாக்கிக் கொள்கிறார்கள். இதெல்லாம் அவர்கள் மனசாட்சிக்கே வெளிச்சம்.

Thursday, April 28, 2011

Wednesday, April 27, 2011

சூன்யம்.

நீ அசைவற்று இருந்து, உலகத்திலிருந்து விடுபட்டு கடந்து, உருவத்திலிருந்து விடுபட்டு கடந்து,கருத்திலிருந்து விடுபட்டு கடந்து ஒலியிலிருந்து விடுபட்டு கடந்து , ஒளியிலிருந்து விடுபட்டு கடந்து,வெளியிலிருந்தும் விடுபட்டு கடந்து , நிர்மலமான எதுவுமற்ற சூன்யத்தை அடைவாயாக! அங்கு பொருள் இல்லை, அங்கு இடம் இல்லை, அங்கு வெளியில்லை, அங்கு இயக்கம் இல்லை, அங்கு காலம் இல்லை, அங்கு கருத்தும் இல்லை,அங்கு நீயும் இல்லை. அங்கு ஒரு இருப்பு மட்டு உள்ளது. அந்த இருப்பும் உனதல்ல! சூன்யத்தில் 'இருக்கிறாய்'. அந்த இருப்பு . இது உன் கருத்துக்கு காண கிடைக்காது. அது சூட்சுமம். இந்த பிரபஞ்சத்தின் இருப்பும் இங்கு தான் இருக்கிறது. அங்கு இருப்பது ஒரே இருப்புதான். இந்த இருப்பு புள்ளியற்ற புள்ளியில் ஒடுங்கியுள்ளது. இருப்பது போலும் இல்லாதது போலும் இருக்கிறது.
உலகத்திலிருந்து விடுபட்டது
உருவத்திலிருந்து விடுபட்டது
கருத்திலிருந்து விடுபட்டது
ஒலியிலிருந்து விடுபட்டது
ஒளியிலிருந்து விடுபட்டது
வெளியிலிருந்தும் விடுபட்டது எது தெரியுமா? அதுவே இருப்பு. அது உன்னுடைய அனைத்திலிருந்தும் விடுபட முடிந்தால்! அது உன்னுடையதா? இல்லையில்லை அதனுடையது தான் நீ. அது இங்கு, அங்கு என உள்ள அனைத்தின் ஆதாரமும் ஆகும்.

Tuesday, April 26, 2011

உள் இணைப்பைப்பற்றி

மறைப்பொருள்

கருத்து,விழிப்புணர்வு,அருள்நிலை.

கருத்து என்பது காலத்தின் மூன்று வித தன்மையில்( கடந்த காலம், நிகழ காலம், எதிர் காலம் ) நடை பெறுவது.

விழிப்புணர்வு என்பது இக்கணம், இக்கணம் எனும் நிகழ காலத்தில் மட்டும் நடைபெறுவது.

அருள் நிலை என்பது நிலைக்காலம் எனும் அனைத்து ( மூன்று வித ) காலங்களையும் உள்ளடக்கிய கால நிலையில் நடை பெறுவது.

இதனாலேயே இதை சூட்சுமம் அல்லது மறைபொருள் என சொன்னார்கள்.

அதாவது கருத்துக்கு அது சூட்சுமமாக இருப்பதால்.

ஏதும் அற்ற வெட்ட வெளியை ஒரு பொருளை உதாரணம் காட்டி சொல்ல சொன்னால் முடியுமா? அதுபோல!
கருத்து என்பது உருவமானது. சூட்சுமம் என்பது அருவமானது.

கருத்து என்பது நமக்கு அனைவருக்கும் பரிச்சயமான ஒன்று.

விழிப்புணர்வு என்பது மிக நுட்பமான உணர்வு பூர்வமான செயல்பாடு.

அருள்நிலை என்பது பொருள் நிலையின் இயக்கமற்ற ஓர் அனுபவநிலை.

கருத்தை அறியலாம்.
விழிப்புணர்வை உணர முடியும்.
அருள்நிலையை அனுபவிக்க மட்டுமே முடியும்.

Monday, April 25, 2011

Saturday, April 9, 2011

Thursday, April 7, 2011

Thursday, March 31, 2011

Monday, March 28, 2011

Tuesday, March 22, 2011

‘நான்’ உருவான கதை.

நம்மிடம் இரண்டு 'நான்'கள் இருகின்றன. நமக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அறியாமையான 'நான்' எனும் கருதுகோள். இன்னொன்று கர்த்தா. இந்த நான்-இல்லாத ஒன்றை இருப்பதாக புனையும் கருத்து. அது நமது எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. அந்த எண்ணங்களுக்கு ஆதாரம் நினைவகத்தில் உள்ள படிம நினைவுகள். நினைவு ( memory ) என்பது இறந்த காலத்தினுடையது. இந்த நினைவு தொகுப்பே நான். இதே தொகுப்பை வேறொரு படிமுறையில் உங்களால் தொகுக்க முடிந்தால், நீங்கள் வேறொரு நானாக உங்களை கருதுவீர்கள்.

இந்த நானின் மையம் உங்கள் பாதுகாப்பை முன்னிருத்தியதாக இருப்பதை கவனியுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவைகளோடு நீங்கள் போராடி உங்களை காத்துக்கொள்ள வேண்டியிருந்ததால் உருவான பாதுகாப்பு மையம் அது. முதன் முதலில் உங்களுக்கு எப்போது ஆபத்து வந்ததை அறிந்தீர்களோ அப்போது விழுந்த விதை அது. - தவிரவும் இந்த தன்மை பரம்பரை பரம்பரையாக கை மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது - இந்த நான் இந்த உடலை மட்டும் நான் என கருதுவதையும் கவனியுங்கள். இந்த நான் எனும் பாதுகாப்பு தன்மை தனக்கென ஒரு சட்ட திட்ட வளையத்தை உருவாக்கி வைத்துக்கொண்டுள்ளது. அந்த வளையம் தான் நான். இந்த நானுக்கு இது தான் எல்லை.


இந்த பூமியில் நாம் காணும் அனைத்து தாவர வகை உயிரினங்கள், நுண்ணுயிரினங்கள், நகர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன மற்றும் விலங்குகள், மனிதர்கள் என உயிருள்ள அனைத்துக்குமே நான் என்ற தன்மை இருக்கிறது. உயிருள்ளதற்கெல்லாம் இந்த நான் தன்மை இருக்கிறது.

உயிருக்கும் ஜடத்திற்கும் உள்ள வித்தியாசமே இந்த நான் தன்மை தான்.

சரி இந்த நான் எப்படி செயல்படுகிறது என காண்போம். நீங்கள் காலையில் விழித்தெழுந்து வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். விட்டு விடுவீர்களா?
உங்கள் மனம்- இந்த நான்- உடனே செயல்பட தொடங்குகிறது. “பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? அவனை உடனே துரத்தி பிடித்து பணத்தைககேள்” என உங்களுக்கு உங்கள் மனம் கட்டளை இடுகிறது.

அந்த எண்ணம் உங்களுக்கு எப்படி தோன்றியது?

நீங்கள் காலையில் உங்கள்பாட்டுக்கு வாசலில் நின்று பல் துலக்கிக்கொண்டிருந்தீர்கள்.உங்களுக்கு நாலாயிரம் ரூபாய் தரவேண்டிய முத்துசாமி சாலை வழியே போகும்பொழுது உங்கள் பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான்.அவனைப்பார்த்ததும் உங்கள் மூளையில் அவனைப்பற்றிய நினைவுத்தொகுப்பு திறக்கப்பட்டு அவனைப்பற்றி அனைத்து தகவல்களும் உங்களுக்கு தொகுத்து தரப்பட்டு "பார்த்து விட்டு 'காணாததைப்போல்' போகிறான். இவன் நமக்கு பணம் கொடுப்பானென்று என்ன நிச்சயம்? " என உங்களை உசுப்பியும் விடுகிறது.

இந்த தகவல் உங்கள் பெரு மூளையிலிருந்து நியூரான் செல்களில் பதிந்து ( நியூரான் செல் தொடர் வழியாக ) ஒரு மின்னோட்டம் மூலம் உணர்வுககுப் போய் உணர்வின் வழியாக உடல் உறுப்புகளுக்கு போய், பின் அது செயலாக மாறி - எப்படியோ துரத்திப்பிடித்து முத்துசாமியை "இன்னும் ஒரு வாரத்தில் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என சொல்ல வைத்து விட்டீர்கள்.

1, எண்ணம் தோற்ற நிலைப்பாடு : எண்ணம் > பாதுகாப்பு > சுயம் > நினைவகம் > பெரு மூளை.
உங்களில் எண்ணம் தோன்றுவதற்கு உங்கள் பாதுகாப்புணர்வு காரணமாக இருக்கிறது.
உங்கள் பாதுகாப்பு தன்மைக்கு உங்கள் சுயம் காரணமாக இருக்கிறது.
உங்கள் சுயம் உருவாவதற்கு நினைவக தொகுப்பே ( கருத்துரு) காரணம்.
உங்கள் நினைவகம் பெரு மூளையில் இருக்கிறது.

2,எண்ணம் செயல் நிலைப்பாடு : எண்ணம் > உணர்வில் மாற்றம் > உடல் செயல்.
எண்ணத்தினால் உணர்வில் மாற்றம்.
உணர்வினால் உடலில் மாற்றம்.
உடல் மாற்றமே செயலாக பரிணமிக்கிறது.

இந்த நான் தன்னை கர்த்தா என எண்ணிக்கொள்கிறது. இந்த நான் எனும் கருதுகோள் கர்த்தாவாக முடியுமா?

உங்கள் கடந்த கால நிறைவேறாத ஆசைகளே நான் எனும் கருத்துருவாக உருவாகி உள்ளது. ஏற்கனவே முடிந்துபோன காலாவதியான தகவல்களை திரட்டி அதற்கொரு வடிவம் கொடுத்தால் அதுதான் நீங்கள். ஏற்கனவே நிறைவேறாத ஆசைகள் மீண்டும் நிகழ்ந்து அவைகள் முற்றுப்பெறுமா?

இறந்த காலத்தை நிகழ்காலத்தில் நிகழ வைக்க துடிக்கும் உங்கள் அறியாமையை என்ன சொல்ல!.

உங்களோட இந்த ‘நான்’ வெறும் எண்ணம் மட்டுமே!

உணமையான கர்த்தாவோ இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கிறது.

எல்லாம் தெளிவாகிவிட்டது.


சரி , உங்களின் ‘நான்’ அறியாமை எங்கு தொடங்கியது என தெரியுமா?


எல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது. நாமும் எந்த ஆபத்தும் இல்லாது இருக்கிறோம். ‘சரி இப்போ நாம் என்ன செய்யலாம்?’ என உங்கள் சுயம் நினைத்த போது, “எனக்காக நீ இனி செயல்படலாம்” என உங்களது நிறைவேறாத ஆசைகளின் தொகுப்புகள் சூழ்ந்து கொண்டு உங்கள் சுயத்தை செயல்பட வைத்தது.

இதுதான் உங்களின் ‘நான்’ உருவான கதை. இல்லாத ஒன்றை இருப்பதாக புனைந்த கருத்து இதுதான்.

Friday, March 18, 2011

ஒளி தரிசனம்.

இந்த 'நான்'மற்றும் 'எனது' எனும் அறியாமைகளை நாம் விட்டெறிவதன் மூலம் - இந்த ஒளி தரிசனம் மூலம் - நமக்கு என்ன கிடைக்கிறது ?

நமது மனதில் உள்ள இருள் அகலுகிறது.
ஒளி துலங்க, துலங்க மனம் தெளிவுறுகிறது.
குழப்பங்கள் முடிவுக்கு வருகின்றன!
அறிவு மேலும், மேலும் விளக்கம் அடைகிறது.
தேவையற்ற சந்தேகங்கள் தொலைகிறது.
உங்கள் மனதை சதா தூண்டிக்கொண்டிருக்கிற தீய பதிவுகள் ஒளிப்பட்டு நசிக்கிறது. வினைப்பயன்கள் ( தீவிர ஒளி தரிசனத்தால் ) செயலற்ற நிலைக்கு வருகிறது.
எதிலும் ஒரு நிதானப்போக்கு உண்டாகிறது.
ஒரு சாந்த சொரூபம் வருகிறது.
மனிதன் முழு மனிதனாக மாற வாய்ப்பு கிட்டுகிறது.

Tuesday, March 15, 2011

முண்டக உபநிஷத்தில் ஒரு பாடல்.

ப்ரணவோ தணு: சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே /
அப்ரமத்தேன வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவேத் // 4 //

ஒளிமயமான பிரம்மத்தை அடைவது என்பதை வில்லில் நாண் ஏற்றி, இலக்கை வீழ்த்துவதற்கு ஒப்பிட்டு இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. முதலாவதாக
நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும். அடுத்து அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும். இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

வில் : ஓங்கார மந்திரம்
நாண் : மனம்
அம்பு : உணர்வு
இலக்கு : ஒளிமயமான பிரம்மம்.

இதில் ஒவ்வொரு கட்டமும் முக்கியமானவை.

1, நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும்.

மனதை அந்த ஓங்காரத்தில் நிலை நிறுத்துதல் வேண்டும். உங்கள் மனமே முழுவதும் ஓங்காரமாக திகழ வேண்டும். உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஓம் ஓம் என ஒரே லயத்தில் உச்சரிக்க வேண்டும். மனம் ஓங்காரத்தில் கரைந்து அத்தனை செல்களும் ஓங்காரத்தில் அதிர வேண்டும். ஒட்டுமொத்த நீங்களும் வெறும் ஓங்காரமாகமட்டும் இருக்க வேண்டும்.

2, அம்பு மிக கூர்மையானதாக இருக்கவேண்டும்.

உணர்வை ஒன்று திரட்டுதலே அம்பாக இருக்கிறது. உணர்வு ஆழமானஅதன் ஆழ்நிலையான இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். இன்னும் ஆழ்ந்து அதிர்வாக,- உங்கள் அனைத்து செல்களும் இதே உணர்வாக, இதே அதிர்வாக -அதிர்வில் ஒர்மையாக துல்லிய தன்மை( கூர்மை ) இருக்க வேண்டும்.


3, அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும்.

முதுகு தண்டு நேராக வைத்து நிமிர்ந்து அமர்ந்து, உணர்வு இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக (இலக்கு) பிரம்ம தாகமாக உருவாகி, முதுகு தண்டின் அடிப்பகுதியான மூலதாரத்திலிருந்து புருவ மத்தியை ( பிரம்ம துவாரம் - ஆக்ஞா ) நோக்கி பொருத்துதல் வேண்டும்.

4, இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு

வலிமையாக பலத்தை ஒன்றாக திரட்டி,சற்றும் பிசகாமல் ஒரே கவனத்துடன், இலக்கை நோக்குதல் வேண்டும். ஓம் எனும் வில்லை வளைப்பதின் மூலம், வில்லுக்கு கட்டுக்கடங்காத விசை உருவாகிறது - ஓம் எனும் சொல்லை தொடர்ந்து லயமாக உச்சரிக்க, உச்சரிக்க இந்த மந்திர ஓசையுணர்வு உங்கள் உடல் முழுவதும், அதிர்வை உண்டாக்கி உங்கள் மனத்துக்கு,உணர்வுக்கு ஒரு ஓர்மை நிலையை தருகிறது. இந்த ஓர்மை நிலையே இலக்கின் நேர்கோடு என்பது.

5, அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

மனம் ஓம் என்ற ஒசையதிர்வில் லயித்து, தன் சுபாவம் விட்டு ( தன் சுபாவம் என்பது எப்பொழுதும் வெளி நோக்கி செயல்படுவது. வெளியில் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து செயல்களிலும் தனது நினைவு தொகுப்பை சதா ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேயிருப்பது. ) உணர்வோடு கலந்து உணர்வுக்கு உந்து சக்தியை தருகிறது.
.
உணர்வு இப்போது தனது 'மேலான' இலக்கு நோக்கி பாய எத்தனமாக இருக்கிறது. வில்லின் விசையும், தன் அறியாமையை விலக்கிய மனமும் உணர்வின் மேலான கூர்ந்த நோக்கும் ஒர்மையாக ஓர் செயலாக இணைந்திருப்பதை காண்கிறோம். இந்த செயலில் உள்ள ஒவ்வொரு அணுவுமே இலக்கை நோக்கியே செயல்பட தயாராக இருக்கிறது.

6, இப்போது நாணிலிருந்து அம்பு விடுபட்டால் நோக்கம் நிறைவுறும்.

அதாவது நமது சராசரி வாழ்வில் மனமும் உணர்வும் இணைந்தே செயல்பட்டு வருகிறது . பெருமூளை நமது நினைவகமாக இருக்கிறது. மனம் பெரு மூளையை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. உணர்வை மனம் தனது வசம் வைத்திருக்கிறது. தண்டுவடம் அனிச்சை செயல்களை கவனித்துக்கொள்கிறது.

அம்பு இப்போது பாயப்போகிறது.

அது நாணின் விசையை கொய்துக்கொண்டு பாய்ந்துவிடும். அம்பும் நாணின் விசையும் அந்த பிரம்மத்தில் சங்கமித்து விடும்.

அதாவது நான் எனும் மனதின் அறியாமையும், எனது எனும் மனதுக்கு கட்டுப்பட்ட உணர்வு கற்றைகளும் அந்த ஒளி பிரம்மத்திடம் சமர்ப்பிக்கப்பட்டால், எங்கும் நீக்கமற பிரம்மம் - பிரம்மம் மட்டுமே -திகழுவதை காணலாம்.

Monday, March 14, 2011

உணர்வு மண்டலம்.

நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள்.

நிமிர்ந்து அமர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து கவனம் முழுவதையும் புருவ மத்தியில் வைத்து , உணர்வு மண்டலமான நரம்பு மண்டலத்தில் உள்ள உணர்வுகள் அனைத்தையும் முதுகு தண்டின் வழியாக மேலேற்றி புருவ மத்திக்கு கொண்டுவாருங்கள்.

உங்கள் புருவ மத்தியில் இப்போது ஒரு துளி ஒளி திகழும். அந்த துளியில் உங்கள் அறிவையும், உங்கள் உணர்வு முழுவதையும், உங்கள் சுவாசத்தையும் இணைய விடுங்கள்.

உங்கள் ஒட்டு மொத்த சாராம்சமும் அந்த ஒளித்துளிதான். வெளியிலிருந்து கேட்கும் எந்த சப்தத்தையும் உங்களை கடந்து போக அனுமதியுங்கள். நீங்கள் இப்போது வெட்ட வெளியாக இருக்கிறீர்கள். இதை நித்தம் பழக்கப்படுத்துங்கள்.

Sunday, March 13, 2011

நமது நரம்பு மண்டலம்.

மொத்தம் 120 வகையான செல்கள் நம் உடம்பில் செயல்படுவதாக பார்த்தோம். இதில் முக்கிய பணிகளை ஆற்றும் செல், நியூரான் செல்லாகும்.
மூளை மற்றும் நரம்புகள் நியூரான் செல்களால் ஆனவை.
செய்திகளை கடத்துவது நியூரான் செல்கள்.

உறுப்புகளில் இருந்து தண்டு வடத்திற்கு வரும் நரம்புகள் உணர்வு நரம்புகள்.
நரம்பு செல்களால் ஆக்கப்பட்ட நரம்பு திசுக்களின் பணி உணர்சிகளை கடத்துவது.
நமது உடம்பில் உள்ள நரம்புகள் அனைத்தும் முதுகு தண்டுவடத்தின் வழியாகவே மூளையை அடைகிறது. தண்டுவட நரம்புகள்(31 இணைகள்)


உடற்செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒரே தொகுப்பு நரம்புறுப்புத் தொகுப்பு ஆகும்.

தலையில் உள்ள உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகளிலிருந்து பன்னிரண்டு நரம்புகள் மூளைக்கு செல்கின்றன . இவை கபால நரம்புகள் எனப்படும்.

மூளையில் நிறைந்திருப்பது நியூரான் செல்களே!

நினைவாற்றல் செயலுக்கு காரணமாக அமைவது பெருமூளை.
பகுத்தறிவின் இருப்பிடம் பெருமூளை.

அனிச்சை செயல் என்பது பெருமூளையின் தொடர்பின்றி உடலில் நடைபெறும் செயல்.
அனிச்சை செயலுக்கு காரணமாக இருக்கும் நரம்பு மண்டலத்தின் உறுப்பு தண்டுவடம்.
தண்டுவடத்தின் மைய குழலில் நிரம்பியுள்ள திரவம் மூளை தண்டுவட திரவம்.

ஆக! நமது அறிவும் உணர்வும் நியூரான் செல்கலாலேயே பராமரிக்கப்படுகிறது.
நமது தண்டுவடம் மூளை மற்றும் நரம்பு மண்டலம் முழுவதும் நியூரான் செல்களால் ஆனவை.

ஆகவே! நாம் நமது தியான வேளைகளில் அந்த பிரபஞ்சத்தின் மூல நாதமான 'ஓம்' எனும் சப்தத்தை நமது உடல் முழுவதும் எதிரொலிக்க, அதிர, தொடர்ந்து உச்சரித்து நமது நரம்பு மண்டலம் முழுமையும் ஒளியாக அதிர்வாக மாற்றமடைய செய்யுங்கள். இப்போது உடம்பிலுள்ள அனைத்து செல்களும் பூரண விழிப்புக்கு வந்து விடும்.

Friday, March 11, 2011

கண்ணாடியின் முகம்.

நமது தியானத்தின் பொழுது நாம் ( மனதையும், உணர்வையும் கடந்த ) ஒளிநிலையில் திளைக்கும்பொழுது நமது இருப்பு தன்மையும், கவனத்தன்மையும் ஒரு நிலைக்கண்ணாடி போல விளங்குவதை காணலாம்.

நிலைக்கண்ணாடி போலஅசைவற்ற( நிலையான ) இருப்பும், நடக்கும் அனைத்தையும் பிரதிபலிக்கும் தன்மையும், பிரதிபலிக்கும் அனைத்தையும் கவனிக்கும்(அசைவற்ற ) சாட்சித்தன்மையும் கொண்ட ஒரு நிலைக்கண்ணாடி போலநாம் இருப்பதை காணமுடியும்.

அந்த சாட்சித்தன்மை அளவேயில்லாது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

அச்சமயம் நம்மை ஒரு நிலைக்கண்ணாடியாக பாவித்துக்கொள்ளல் வேண்டும். ( நமது மூல உண்மையும் அதுதான். ) கவனிக்கும் சாட்சித்தன்மைக்கு எந்த வித உணர்வு பேதமோ, எந்த வித அறிவு பேதமோ கிடையாது. அது எந்த நிகழ்வை கண்டாலும் சற்றும் சலனப்படுவதில்லை.

அது, நான் எனது என்ற சுயமற்றது. அதுவே அனைத்துமாக இருப்பது.

அதிலிருந்து எதுவும் விலகியிருப்பது இல்லை. அனைத்துமாயிருப்பது அது.

நமது மனதுக்கு காட்சிப்படுவது வெறும் தோற்ற நிகழ்வுகளே!

ஆனால்,அந்த சாட்சித்தன்மைக்கு அதுவே யது. அது , அதுவே அதாக இருப்பதால் அதற்கு பேதமில்லை. நடக்கும் நிகழ்வும் அதுவே! காணும் சாட்சித்தன்மையும் அதுவே!. சுற்று சூழ இருக்கும் பௌதிக உலகும் அதுவே!அனைத்து நிகழ்வுகளும் அதுவே!

வெறும் சாட்சித்தன்மையுடன் மட்டும் விளங்கும் ஒரு மகானின் முகம் கண்ணாடியின் முகத்தைப்போன்று இம்மியும் சலனமற்று தோன்றும்.

Monday, March 7, 2011

உடம்பு

நம்முடைய இந்த உடம்பு இன்று இப்படி இருப்பதற்கு காரணம், நமது பரம்பரை பரம்பரையான சிந்தனை அமைப்பும், பழக்க வழக்கங்களுமே. நமது இந்த உடல் ஒரு உயிருள்ள கருவி.(Bio instrument) உங்களுக்கு இதன் தொழில் நுட்பம் தெரிந்தால், இதன் தன்மையை எளிதில் மாற்றி வைக்க முடியும்.

இதன் தொழில்நுட்பம் மிக எளிமையானது. உடலை எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே பழக்கமாகி மாறிவிடும். உடம்புக்கு எந்தவித தனி நோக்கும் கிடையாது. அது ஒரு உயிர்ப்புள்ள கருவி அவ்வளவே!. இதை பழக்கத்தால் மட்டுமே மாற்ற முடியும். நீங்கள் காலையில் ஆறு மணிக்கு எழும் பழக்கமுள்ளவரா? தொடர்ந்து ஒரு பதினைந்து நாட்கள் சரியாக அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து பழகுங்கள் பின் நீங்கள் கஷ்டப்படவே வேண்டியதில்லை, சரியாக மூன்று மணிக்கு நீங்களாகவே அனிச்சை செயலாக எழுந்து விடுவீர்கள்.

உங்கள் உடலில் செல்கள் புதிது புதிதாக உருவாகிகொண்டேயிருக்கிறது. நீங்கள் எப்படி பழக்கப்படுத்துகிறீர்களோ அப்படியே அது பழகிக்கொள்ளும்.

நீங்கள் நித்தமும் ஒரு குறிப்பிட்ட சரியான நேரத்தில் தியானம் செய்துவர , நீங்கள் உங்களை பொருட்களாலான உருவமாகவோ, அல்லது அலைகளாலான ஒளியாகவோ உங்களை உருவகித்து வந்தால் உங்கள் உடல் அதற்கு பழக்கப்பட்டுவிடும்.

உங்களை நீங்கள் எல்லையுடைய உருவமாகவும் பாவிக்கலாம், அல்லது எல்லைகளற்ற ஒளியாகவும் பாவிக்கலாம். இந்த ஒளி நிலையை தொடர்ந்து பழக்கப்படுத்தி தனது தேகத்தையே ஒளியலையாக மாற்றி தேகத்தையே ஒளியலையாக மாற்றி ஒளியோடு ஒளியாக இணைத்து காட்டியவர் அருட்பெரும் வள்ளலார் அவர்கள்.

Sunday, March 6, 2011

அலை - நிழல் - உரு .

நமது தியானத்தின்போது நாம் ஒளிஅலையாகவும், நிழலாகவும், பின் உருவாகவும் மாறுவதை காணமுடியும். கணநேரம் அலையாகவும், அடுத்து கணநேரம் நிழலாகவும், பின் அது உருவாகவும் மாற்றமடைவதை நாம் அறிய முடியும். அலையாக நம்மை அறியும்பொழுது நமக்கு எல்லைகளே இல்லாது இருப்பதை அறியலாம். நிழலாக இருக்கும்பொழுதும் நாம் எல்லைகளை அறிவதில்லை. நம்மை உருவாக அறியும்போழுதே நமக்கு எல்லைகள் உண்டாவது தெரிகிறது.

Thursday, March 3, 2011

புவி ஈர்ப்பு விசையும், பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்.

நாம் இப்பொழுது புவி ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு, இன்றைக்கு நமக்கு இருக்கும் உணர்வு நிலைமையை அனுபவித்து வருகிறோம். இந்த வலி, சுகம் என்பது மாதிரி நமக்கு இப்போதைய உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுகள் அனைத்துமே இந்த புவிஈர்ப்பு விசை நமது முதுகு தண்டின் கீழ்பகுதியான மூலாதாரம் எனும் முதுகு தண்டின் நுனி பகுதியில் துவங்கி படிப்படியாக மேலேபோய் மூளையை அடைவதால் ஏற்படுவது. இது மூலாதாரத்தில் வலுவாகவும், மூளைப்பகுதியில் குறைந்தும் நமது மூளையிலுள்ள நியூரான் அணுக்களை புவிஈர்ப்பு விசையானது கீழ்நோக்கி இழுத்துவருகிறது. இதனால் நமது உணர்வு நமது உடலைமட்டும் சார்ந்ததாக, எல்லைகள் உடையதாக இருக்கிறது. இது ஒரு குறையான உணர்வே!

நாம் நமது தியானத்தின்போது அந்த பிரபஞ்ச ஈர்ப்புவிசையை நமது உச்சந்தலை தொடக்கி முதுகு தண்டு வழியாக கீழிறக்கி மூலாதாரத்தில் நிறுத்தி, நமது முழு கவன நிலையையும் மூலாதாரத்தில், குவித்து நிறுத்தி அனைத்து செல்களையும் அதிர்வில் எழுப்பி மேல்நோக்கி, புருவ மத்தி, அல்லது உச்சந்தலையை நோக்கி முழு பிரபஞ்ச ஈர்ப்பு விசையையும் நாம் ஏற்றுக்கொண்டோமானால், அந்த ஈர்ப்புவிசை மூளைப்பகுதியில் வலுவாகவும், படிப்படியாக குறைந்து கொண்டே கீழ்நோக்கி மூலாதாரத்தை அடைகிறது.

இப்போது நமது உணர்வு தகவமைப்பே தலை கீழாக மாறுவதை காணமுடியும்.

இப்போது, நீங்கள் உங்களின் உணர்வு எல்லையை கவனித்தீர்களானால், நமது உணர்வு ஒரு எல்லையற்ற தளத்தில் விரிவடைந்து கொண்டேயிருப்பதை காண முடியும்.

அங்கு எந்த எல்லைகளும் இல்லை. நீங்களே இப்போது ஒரு எல்லையற்ற தன்மையில் இருப்பதையும் காண்பீர்கள்.

இந்த எல்லையற்ற தன்மையில் நீங்கள் நிலைத்திருக்கும்பொழுது இயல்பாக ஒரு எண்ணம் உங்களில் தோன்றினால் கூட, அடுத்து அது தொடர் எண்ணமாக மாறுவதில்லை, தொடர்வதுமில்லை.

இதற்கு காரணம்,

உங்கள் உணர்வுக்கு எல்லையிருந்தால், ஒரு எண்ணம் தோன்றினால், அந்த எண்ணம், உணர்வில் விழுந்து அந்த எல்லைகளில் மோதி, எதிரெண்ணமாக தொடர்கிறது. உங்கள் உணர்வுக்கு எல்லையில்லாத போது அந்த உணர்வில் விழும் எண்ணம் அங்கேயே மரித்து விடுகிறது.

எல்லையற்ற உணர்வே முழுமையானது, நிறைவானது, பூரணமானது. அங்கு எந்த கேள்வியும் இல்லை. கேள்விகேட்க, எந்த ஹேதுக்களும் இல்லை.

இயற்கையினால் நமக்கு விதிக்கப்பட்ட உணர்வே இந்த முற்றுணர்வுதான். நாம் அறியாமையில் சிக்கி இருக்கிறோம்.

இந்த முற்றுணர்வை நோக்கியே அனைத்துயிரும் பயணித்துக்கொண்டிருக்கிறது.

புவியில் தற்போது வசிக்கும் தாவர விலங்குகளின் எண்ணிக்கை 1200000 ( பன்னிரண்டு லட்சம் ) வகைகள்.

Monday, February 28, 2011

உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வாழ்க்கை முறை பிடிக்கவில்லை, அதில் ஏதும் சத்தியம் இல்லை, என தோன்றினால், சரி, இந்த வாழ்க்கையை பின்னும் சததியமுள்ளதாக வாழ வழிவகை என்ன? என புதுவாழ்க்கை முறையை தேட வேண்டும். அதற்கு முன் நமக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது ? என்பதை அறிய வேண்டும். நமக்குள் புரோக்ராம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. இந்த உடல் சுமார் எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்டது. இவ்வளவு செல்களும் தாய் தந்தையரின் இணைவிலிருந்து ( தாயின் கருமுட்டையை தந்தையின் விந்தணு துளைத்து இரண்டும் ஒன்று கலந்து தாயின் கருவில் தனி உயிராக துவங்கிய வளர்ச்சி இன்று எழுபது டிரில்லியன் உயிர் செல்களை கொண்ட ஒரு குழுவாக, உடல் எனும் அமைப்பாக, தோற்றமாக காட்சி தருகிறது. இந்த புரோக்ராம் பல தலைமுறைகளாக தொடர்ந்து நம்மை வந்தடைந்திருக்கிறது. ( தாய் தந்தை இணைவு துவங்கி - 50 வயது - இன்றுவரை நம்மி நடந்திருப்பது வேதியல் வினைகளே! ) இந்த புரோக்ராமை மையப்படுத்தியே வேதியல் வினைகள் நடக்கிறது. அல்லது இந்த புரோக்ராமே வேதியல் வினைகளை சரிபார்த்துககொள்கிறது. சரி, இது உங்களுக்குள் செய்யப்பட்டிருக்கும் புரோக்ராம். இந்த புரோக்ராமை வெளிக்காரணிகள் பாதிக்கவே செய்யும். வெளிசூல்நிலைகளான வெயில், மழை,காற்று தட்ப வெட்பம் இது போன்ற இன்ன பிற. எந்த மாதிரி சூழ்நிலைகளையும் தாங்கி, அல்லது ஒதுங்கி இருந்து தன்னை தகவமைத்துகொள்ளும் அளவுக்கு இந்த புரோக்ராம் செயல்படுகிறது. இந்த புரோக்ராம் தண்டுவடத்திலும், , மூலையிலும், சுரப்பிகளிலும் இந்த மூன்றிலும் கலந்து செயல்படுகிறது. இதிலிருந்து வருவதே உங்கள் எண்ணம், உணர்வு அனைத்தும்.

ஒருமனிதன்தன்னையேதனக்குஎப்படிஅறிமுகப்படுத்திக்கொள்கிறான், அடையாளப்படுத்திக்கொள்கிறான், என்பதையும் கவனிக்க வேண்டும். தான் யார்? நான் இந்த குடும்பத்தவன். என்னுடைய முழு ஈடுபாடும், செயலும் இந்த குடும்பத்துக்காக என்றும் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குடும்ப வாசிகள். அடுத்து ஜாதீய வாசிகள், அடுத்து மதவாசிகள், அடுத்து தேசிய வாசிகள், ஏன்? கட்சி வாசிகள்கூட இருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பொதுவாக இவர்கள் பூமி வாசிகள். ( பூலோகவாசிகள் ) இவர்களையெல்லாம் இப்படி பந்தப்படுத்தி வைத்திருப்பது இந்த பூமியின் ஈர்ப்பு விசையான புவிஈர்ப்பு விசையே. வெளிக்காரணியான இந்த ஈர்ப்புவிசையில் நமது புரோக்ராம் கட்டுப்பட்டு நம்மை இத்தனை விஷயங்களில் பந்தபடுத்தியுள்ளது. இந்த ஈர்ப்பு விசையே முதலாமவருக்கு குடும்ப ஈர்ப்பு விசையாகவும், அடுத்தவருக்கு, அடுத்தவருக்கென செயல்படுகிறது. அது அவர்களை அவர்கள் அறிமுகப்படுத்திக்கொண்ட விதம், அடையாளப்படுத்திக் கொண்டவிதம்.

உண்மையான சத்தியம் என்ன? நான் யார்? இந்த பூமியில் நான் பிறந்ததின் காரணம் என்ன? இந்த நான் என்பது என்ன? நான் என்பதே ஒரு கற்பனா ரூபம் என அறிந்த பின் இனி செய்ய வேண்டியது என்ன? அந்த மூல சத்தியம் என்ன? இந்த கேள்விகள் எழுந்து இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம் என்ன? என்று நோக்கும்போது - ஒரு சரியான உண்மையை நாம் இப்போது இருக்கும் உடல் தகவமைப்பில் அறிந்து கொள்ள முடியாது என தெரிய வருகிறது. இப்போது நம்மில் இயங்கும் புரோக்ராம் நம்மை அனைத்தின் மீதும் பந்தப்படுத்தி, இந்த பந்தத்திலிருந்து விடுபட மறுக்கும் புரோக்ராம் அமைப்பு. இந்த அமைப்பில் ஒரு மனிதராவது போதும் என திருதியுற்று மரித்தாரா என்றால் 'இல்லை' என்றே பதில் வரும். ஒரு பொருளிலோ, ஒரு உறவிலோ, ஒரு கற்பனையிலோ பந்தப்பட்டிருக்கும் பொழுது சரியான உண்மையை நாம் அறிய முடியாது.

ஆனால் நம்முடைய அடிப்படைத்தன்மை என்னவோ திருப்தியையும் , பூரணத்தையும் எதிர்கொண்டதாக இருக்கிறது. அந்த திருப்தியையும், பூரணத்தையும் நாம் காண வேறு ஏதாவது வழிமுறைகள் உண்டா? என தேட வேண்டியிருக்கிறது. இப்படி பல காலமாக மனித குலம் தேடிக்கொண்டிருக்கிறது. கண்டடைந்தவர்களும் ஏராளமானவர்கள். கண்டடைந்தவர்கள் தங்களை “நாங்கள் இந்த பூமிக்கு மட்டும் சொந்தமில்லை, இந்த பிரபஞ்சத்துக்கே சொந்தமானவர்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் பிரபஞ்சவாசியாக வாழ விரும்பினால், உங்கள் அறியும் தகவமைப்பை மாற்ற வேண்டும்.

இந்த புரோக்ராம் மாற்றம் என்பது வேதியல் வினைகள் மூலமே சாத்தியப்படும்.
இந்த வேதியல் வினைகளை எப்படி செய்வது?

புறக்காரணிகளால் நமது புரோக்ராம் மாறுதலடையும் வாய்ப்புள்ளது. ஆனால் நாம் பல காலம் அவைகளை தவிர்த்தே வந்துள்ளோம். நமக்கு வெளியே நெருக்கமாக புவிஈர்ப்பு விசையும், வெளியில் கிரக ஈர்ப்பு விசைகளும், அதற்க்கு அடுத்து சூரிய ஈர்ப்பு விசையும், அதை அடுத்து உடுமண்டல ஈர்ப்புவிசையும், அதையும் அடுத்து உடுமண்டல தொகுப்பு ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, இப்பிரபஞ்ச ஈர்ப்பு விசையும்,அதையடுத்து, சூழ்ந்து நிற்கும் சூன்ய ஈர்ப்பு விசையுமென மொத்த விசைகளும் நம்மை சூழ்ந்துள்ளன. இதில் ஓர் ஒழுங்கான அமைப்பும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசைகளை நாம் நமக்குள் அனுமதிததோமானால், ஏற்கனவே நம்மிடம் உள்ள இந்த பந்த தன்மை அகன்று, ஒரு நிறைவான, குறைவற்ற, பூரண தன்மையை அடைவோம். அந்த ஒழுங்கான ஈர்ப்பு விசை நம்மில் நுழைந்து நமது புரோக்ராமில் சரியாக தகவமைத்து அந்த பரிபூரண சத்தியத்தை நாம் அறிய வழிவகை செய்து தரும். நம்மையும் பூரணத்தன்மையில் நிலை நிறுத்தும். உங்கள் புரோக்ராம் தன்னிறைவுறும்.

Sunday, February 27, 2011

சத்தியலோகம்.

அறியாமையுலகும் - சத்தியலோகமும்.

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் , அதிலிருந்து உதித்த, முழுமையற்ற, குறைபாடுடைய, நிலையற்ற, சதா சஞ்சரிக்கும் சதா மாற்றமடையும், உருமாறும் இயக்கமுறும் 'மாயா' அறியாமை என 'கலந்து' நிலைமை இருக்கிறது.

இதில் நாம் ( கண்ணில் காணுவது தான் நிலையானது எனும் )அறியாமையோடு அறியாமையாக கலந்து உறவாடுவோமா ? இல்லை, எது நிலையான சத்தியம் என தேடி இனம் கண்டு சத்தியத்தோடு சத்தியமாக இணைந்து வாழ்வோமா?

இந்த பொருட்களாலான பிரபஞ்சமே நிலையற்ற ஒன்றுதான். சதா மாற்றமுறுவதுதான். ( மனிதன் தோற்ற பிரமையில் மூழ்கிக்கிடககிறான்.) - ஒரு பொருளுக்கு திடத்தன்மையையும், தோற்றத்தையும் அளிப்பது . எலக்ட்ரான்களின் அதிவேக விளைவுகளே என்பதை முன் கட்டுரைகளில் பார்த்தோம்- இந்த மாயா பிரபஞ்சத்திலிருந்து கிளைத்த அறியாமைகள்தான் அனைத்து உயிர்களும், நீங்களும், நானும்.

நம்மில் கிளைக்கும் அறியாமைகள்தான் மனம் எனும் எண்ணங்களும், உணர்வும். ஆனால் இந்த அறியாமைகள் எல்லாம் எதில் நிலைகொண்டிருக்கின்றன என்றால்? அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியத்திலே!

அந்த அசைவற்ற, நிலையான பரிபூரண சத்தியம் ஒவ்வொரு அணுவிலும் கோர்த்து நிற்கிறது.

அனைத்து அறியாமைகளையும் எலக்ட்ரான் துகள்களே நடத்துகின்றன!. அதற்க்கு இணையாக இருப்பது புரோட்டான் துகள்கள். இதில் எலக்ட்ரான் துகள்களே 'வெளிநோக்கி' செயல்புரிவது.

உங்களுக்கு இருப்பது போலவே, இந்த பிரபஞ்சத்துக்கும் தேடல் இருக்கிறது. முழுமையுறா அனைத்துக்குமே தேடல் இருக்கிறது. அந்த முழுமையுறா தன்மையே அறியாமை. இது அங்கிங்கெனாதபடி பிரபஞ்சமெங்கும் பரவி, விரவிக்கிடக்கிறது. அதுதான் உங்களிடமும் செயல்படுகிறது.

நீங்கள் கோடிக்கணக்கான பிறவிகளாக அந்த முழுமையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

அந்த முழுமையை அடைந்த எதுவும் எதையும் தேடுவதில்லை. அது அந்த முழுமையோடு முழுமையாக முழுமையாகி விடுகிறது.

அந்த முழுமையே சத்தியலோகம்.அறிவு என்பது நிலையான அசைவற்ற சத்தியம், அறியாமை என்பது இயக்கமாயிருக்கிற இயக்க பிரபஞ்சம் முழுவதுமே!.

Friday, February 25, 2011

ஈர்ப்பு விசைகள்

நமது உடலில் மின் தன்மை அறிவாகவும், காந்த தன்மை உணர்வாகவும் செயல்பட்டு வருகிறது. நிற்க!

முன் கட்டுரையில், - உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.- என பார்த்தோம்.

நாம் புவிஈர்ப்பு விசையில் கட்டுண்டு பூமியோடு சார்ந்து செயல்படுகிறோம். நமது உடல் மீது புவிஈர்ப்பு விசையும், சூரியனின் ஈர்ப்பு விசையும், மற்றும் கோள்களின் ஈர்ப்பு விசைகளும் செயல்படுகிறது.

இதில் நம் மீது வலுவாக செயல்படும் விசை புவிஈர்ப்பு விசையே.( ஆனால், பூமியே சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டுத்தான் சுற்றுகிறது.) இன்னும் உடுமண்டல ஈர்ப்புவிசைகளும் இருக்கின்றன. இத்தனை விசைகளும் நமது காந்த புலன்மீது செயல்படுவதாலே இவ்வியக்கங்கள் நமக்கு உணர்வாக துலங்குகிறது.

இந்த உணர்வு தன்மையை நாம் தியான நேரத்தில் அதிர்வு தன்மையாக மாற்றுவதற்கு , நமக்கு வெளியிலிருந்து, நம்மை ( பூமியை ) நோக்கி ஈர்க்கும் சூரிய ஈர்ப்பு விசையை நாம் நமக்கு உள் வாங்க வேண்டும். அதாவது நமது உடலிலுள்ள செல்களின் கனம் ( weight ) பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டு,ஒரு கிறக்க நிலையில்( சுருண்டு ) கீழ் நோக்கியே செயல் பட்டுக்கொண்டிருக்கின்றன.

அந்த செல்களை மேல்நோக்கி ,விழிப்பாக ( OPEN ) புவிஈர்ப்புக்கு எதிராக செயல்பட வைக்க முடிந்தால் உணர்வு நிலை அதிர்வு நிலையாக மாற்றமடையும். ( இதனாலேயே தியானத்தில் அமரும் முன் நமது உடல் நேரடியாக பூமியின் மீது படாமல் எதாவது மரப்பலகையையோ , அல்லது எதாவது மொத்த துணிகளையோ ஆசனமாக அமைத்து அதன் மீதே அமருகிறோம்.) நமக்கு முன் வந்த மகான்களும் புவிஈர்ப்பு விசை குறைவாக செயல்படும் இடங்களான மலை உச்சி , அல்லது மிக உயரமான மலைப்பிரதேசம் ( இமயமலை ) போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தனர்.

இனி இந்த ஈர்ப்பு விசைகள் நம்மீது எப்படி செயல்படுகின்றன என்பதை பார்ப்போம்.

புவி ஈர்ப்பு விசையே நம் மீது அதிக வன்மையுடன் இயங்குகிறது. நாம் பூமியின் மிக அருகில் பூமியோடு ஒட்டியே இருப்பதால் நம் மீது வன்மையாக செயல்படுகிறது. ஒரு பொதுவான பிரபஞ்ச ஈர்ப்பு விசையானது நம் மீது ஒரு சிறு தாக்கத்தையே ஏற்படுத்த முடிகிறது. பூமியின் நேரடியான ஈர்ப்பு விசையான - சூரிய ஈர்ப்பு விசை- கூட நம் மீது அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்த முடிவதில்லை. இந்த ஈர்ப்பு விசைகள் நம் உடலின் எந்த பகுதியை மையப்படுத்துகிறது என கவனித்தால் தெரியும் , அது நமது முதுகு தண்டேயாகும்.

முதுகுத்தண்டை செங்குத்தாக நேராக நிறுத்தி வைத்தால், வெளியிலிருந்து வரும் சூரிய ஈர்ப்புவிசை நமது உச்சந்தலையில் துவங்கி நேராக கீழிறங்கி முதுகு தண்டு வழியாக, முதுகு தண்டின் நுனியை நோக்கி பிரவேசிக்க முயல்கிறது தெரிய வரும். ( இத்தனை வகை உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே முதுகு தண்டை நேராக நிமிர்த்தி வைக்கும் திறமை இருக்கிறது, காண்க ! )

நீங்கள் தியானத்தின் போது உங்கள் உணர்வின் மீது தியானித்து உணர்வின் அசைவ்களை குறைத்துக்கொண்டே வந்தால் அது சிற்றசைவாக, அதிர்வாக உங்கள் முதுகு தண்டின் நுனியான மூலாதாரத்தில் நின்று அனைத்து செல்களையும் மேல்நோக்கி அதிர வைத்தால், அந்த சூரிய ஈர்ப்பு விசை,உச்சந்தலையிலிருந்து கீழிறங்கி முதுகு தண்டின் வழியாக மூலாதாரத்துக்கு ஓடி வரும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலகி, சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது உங்கள் தேகமே ஒளிப்பிரவாகமாகும்.

நீங்கள் பூமியின் ஈர்ப்பு விசையில் செயல்படும் பொழுதே மனம்,மற்றும் உணர்வு செயல்படும்.
சூரிய ஈர்ப்பு விசைக்கு ஆட்படும்போது மனம் ஒளியாகவும், உணர்வு அதிர்வாகவும் செயல்படுவதை காண்பீர்கள்.

முன்பு பூமியின் ஈர்ப்புவிசையில் உங்கள் மூளை செயல் புரிந்ததற்கும் , இப்போது சூரிய ஈர்ப்பு விசையில் உங்கள் மூளை செயல் புரிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதாவது உங்கள் உடலிலுள்ள செல்கள் சராசரியாக இருக்கும்பொழுது உங்கள் மூளை செயல்பட்டதிற்கும், இப்போது செல்கள் மேல் நோக்கி இருக்கும்பொழுது செயல் படுவதற்கும் உள்ள வித்தியாசம் அது.

இப்போது உங்கள் உடலின் தகவமைப்பே தலை கீழாக மாறி செயல் படுவதை அறிவீர்கள்.

அநுபூதி நிலையில் தொடர்ந்து நீடிக்கும் மகான்களின் நடை முறை நடத்தைகள் வித்தியாசமாக இருப்பதற்கு இதுவே காரணம்.

Thursday, February 24, 2011

அர்த்தமே வேண்டாம் ஆனந்தமா யிரு.

நாம் இப்போது இன்பம் துன்பம் இரண்டையும் மனதின் துணை கொண்டே உணர்ந்து வருகிறோம்.
மனம், இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு)நல்லது, ஆகவே இன்பமாயிருக்கலாம். அல்லது , இந்த உணர்வு நமக்கு(உயிருக்கு) கெட்டதுஆகவே, இது நமக்கு துன்பம் என மனது சதா தணிக்கை செய்து கொண்டேயிருக்கிறது.

மனதால் தணிக்கை செய்து உணர்வது மட்டுமே புத்திசாலித்தனம் என நினைக்கிறோம். எந்த ஒரு உணர்வும் ஒரு காரண காரியத்தோடு, ஒரு அர்த்தத்தோடு இருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது -அப்படியே 'சரியாக' நடந்தால் - இப்போது உணர்வு, மனதின் கட்டுப்பாட்டில், கட்டுப்பட்டு இருப்பது மனதுக்கு உறுதியாகிறது. உணர்வு தனித்து உணர துவங்கினால் மனதால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அது மனதின் சுயத்துக்கு விடப்பட்ட சவாலாக எண்ணுகிறது.

மனதின் சதா எதையாவது நினைத்துக்கொண்டேயிருக்கும் செயலைக்குறைக்க ஒரு உபயம்.

உணர்வு நிலையில்காரண காரியமின்றி சதா இன்பமாயிருங்கள். அவ்வப்போது மனம் ஓடிச்சென்று உணர்வை கவனிக்கும். ஏன் இப்படி இன்பமாக தானே உணர்கிறது என! காரணம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் " இன்பமயிருப்பது உயிருக்கு உகந்ததே! என விட்டு விடும். மனம் எந்த பாதிப்பும் அடையாது. அதே சமயம் மனதின் தேவையற்ற ஓட்டம் குறையும். உங்கள் கவனம் எப்போதும் உணர்வின் ஆனந்தத்திலேயே குவிக்கப்படுவதால், உங்களின் அத்தனை செல்களும் குதூகலமடையும். ஆகவே ' அர்த்தமே வேண்டாம் ஆனந்தமாயிரு'.

ஒளியே நான்.அதிர்வே நான்.

நமது மிக ஆழ்ந்த தியான வேளையில் நமக்கு புருவ மத்தியில் ஒளி தோன்றுவதை காணலாம். நாம் நமது மனம் , உணர்வு இரண்டையும் கடந்து இந்த அநுபூதி ஒளித்தனமைக்குள் நுழைய ஒரு இலகுவான உத்தி. இதோ!

அதாவது நமது மனமே தனது விருத்தியை குறைத்துக்கொண்டு வந்து தனது மூல நிலையான ஒளி நிலைக்கு வருகிறது. ( உங்கள் மனதில் விளக்கமாவது ஒளி எனும் அறிவேயாகும். ) அறிவே ஒளியாக திகழ்கிறது. உங்கள் மனமே இப்போது -தியான நிலையில்- ஒளியாக துலங்குகிறது.

உங்கள் உணர்வு தளத்தில் உணர்வாக திகழ்வது ஈர்ப்பு விசையே . உங்கள் உணர்வு இக்கணம் , இக்கணம் எனும் விழிப்புணர்வுக்கு வந்து அதுவே அதிர்வாக மாறுகிறது.

ஆக! உங்கள் மனம் ஒளியாக மாறிவிட்டது, உங்கள் உணர்வு அதிர்வாக மாறிவிட்டது. {நீங்கள் மனதையும், உணர்வையும் கடந்து விட்டீர்கள்.)

உங்கள் மனமே ஒளியாகவும், உங்கள் உணர்வே அதிர்வாகவும் மாற்றமடைந்திருக்கிறது.

நீங்கள் தியான வேளையில் இந்த ஒளியே நான். இந்த அதிர்வே நான். என உங்களை ஒளியாகவும், அதிர்வாகவும் அறிந்து அந்த அதிர்விலும், ஒளியிலும் வியாபித்திடுங்கள்.

நீங்கள் தியான வேளையில் ஒளியாகவும், அதிர்வாகவும் இருக்கிறீர்கள்.

விருத்தி.

நமக்கு 'நான்' எனும் விருத்தியும், அந்த பிரம்மத்திற்கு பிரபஞ்சமெனும் பொருள் விருத்தியும் உண்டானது வெளிநோக்கிய தன்மையினால் தான்.

நமது மனம் தற்ப்பாதுகாப்புக்காக வேண்டி வெளிநோக்கி செயல்படுவதால், இந்த மனதிற்கு நான் எனும் ( மாயசொரூபம் )சுயம் விருத்தியானது.

இந்தபிரபஞ்சத்தில் அணு நிலையில்எலக்ட்ரான் வெளிநோக்கி செயல் படுவதால் தான்( பொருளாக ) பிரபஞ்சம் மேலும் விருத்தியாகிக்கொண்டு இருக்கிறது.

இந்த வெளி நோக்கிய தன்மை நம்மில் குறைந்து அக நோக்கான தன்மையாக மாறுமானால், இந்த 'நான்' எனும் சொரூப விருத்தியை நிறுத்த முடியும்.

Tuesday, February 22, 2011

ஒளியுடல்.

நமக்கு ஸ்தூலமான இந்த உடல் உள்ளது போல மற்றும் இரு உடல்கள் இருக்கின்றது. ஒன்று உணர்வு உடல், மற்றொன்று ஒளியுடல்.இதே போல இந்த பிரபஞ்சத்துக்கும் மூன்றுவித உடல் இருக்கிறது. நாம் நேரிடையாக காணும் இந்த பூமி, மற்றும் சூரியனை கிரகங்களை, உள்ளடக்கிய சூரியக்குடும்பம், இதனையும் உள்ளடக்கிய பால் வீதி மண்டலம் , அதனையும் உள்ளடக்கிய இப்பிரபஞ்சம். இது ஸ்தூல பிரபஞ்ச உடல்.

அடுத்தது ஈர்ப்பு விசைகளாலான உணர்வு பிரபஞ்ச உடல்.

அடுத்து, இவை அனைத்தையும் தோற்றுவித்தும், மறையவைத்தும்,தோற்றுவித்தும் தன்னகத்தே வைத்துள்ள ஒளியுடல். இதை வேதத்தில் பிரம்மம் என்கின்றனர்.

நாமும் நமது தியான வேளையில் இந்த மூன்றுவித தன்மையுள்ள உடல்களையும் தரிசிக்க முடியும். நாம் நமது ஸ்தூல உடல் இயக்கங்களையும், ( மனதின் இயக்கமும் ) உணர்வு உடல் இயக்கங்களையும் கடந்து ( இந்த 'நான்' எனும் இரண்டு அறியாமைகளையும் விட்டு - ஒரு இம்மியளவு இயக்கமும் இல்லாது. ) தரிசிக்க முடிந்தால் இந்த ஒளியுடலை அடைவோம். அது ஏற்கனவே நம்மில் உள்ளது தான்.

இந்த, நமது ஒளியுடலில் நாம் தொடர்ந்து நிலைக்க முடிந்தால் அது எல்லைகளற்று இந்த பிரபஞ்ச பேருடலோடு இணைந்த ஒரே ஒளியுடலாக கலந்து பொருந்தி இருப்பதை அறிவோம்.

"எட்டுத் திசையும் பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய் முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை “ என்று பட்டினத்தார் பாடுகிறார்.

Sunday, February 20, 2011

இனி மரணம் உனக்கில்லை.

மரண பயம் இல்லாத மனிதரில்லை என்கிற அளவுக்கு இந்த மரண பயம் நம்மை தொற்றிக்கொண்டுள்ளது. இங்கிருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் ஒரு நாள் நான் தான் இறந்து 'இல்லாது' போய்விடுவேன் என்கிற அச்சம் நமக்கிருக்கிறது. இந்த இல்லாது போவது என்பது நமது மனதுக்கும், உணர்வுக்குமே பொருந்தும். இந்த 'நான்' ஐ இருப்பதாக பாவித்து வருபவை இவை இரண்டுமே!

மரணத்துக்கு பிறகு இல்லாது போவது இவை இரண்டுமே!.உண்மையிலேயே இல்லாமல் இருப்பவைதான் இவை.( நான் என்பது ஒரு அறியாமை. தான் இருப்பதாக ஒரு மாயா சொரூபத்தை நம்புவது.அதில் உண்மையோ , நிதர்சன்மோ இல்லை.அது மனதின் புனைவு. )

மனதின் புனைவும், மனம் சார்ந்த உணர்வின் புனைவும்கடந்த, தியான வெளியில் என்ன உள்ளதோ அதுவே உண்மை. அது நிலையானது.

உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் , உன் உடலையும் எரித்து சாம்பலை கரைத்து விட்ட பின் மீதம் என்ன இருக்கிறதோ ( தியான வெளியில் என்ன உள்ளதோ ) அதுவேஉண்மை. அது எப்போதும் உள்ளது. நிலையானது. அதற்கு ஆதியில்லை, அந்தமுமில்லை.

தியானத்தில் உனது அறியாமைகளை நீ கடந்து இதில் பிரவேசித்து விட்டால், உனக்கு மரணமில்லை. இந்த மரணம் எதில் நிகழுமோ அதையே ( அறியாமை ) தொலைத்து விட்ட பின், இனி மரணம் எங்கு நிகழும்?

யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி /
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம //15// - ( கடோபநிஷத். )

பதவுரை : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவமாகவே ஆகிறார்.

Friday, February 18, 2011

பழக்கதோஷமே மனதின் சுயம்.

இந்த தகவலை சற்று நிதானமாகவும், கவனத்துடனும் படிக்கவும். நமது ஆழ்ந்த தியானத்தில் அனைத்து செல்களும் விழித்து,ஒரே அதிர்வாக ஏகத்தன்மையுடன் புருவ மத்தியில் ஒளிரும் ஒளியில் கலந்து , எல்லைகளற்று, எங்கும் ஒரே ஒளிப்பிரகசமாக துலங்க,
அச்சமயம் நாம் நமது அறியமைகளான நான் எனும் எல்லையுடைய மனம், எனது எனும் எல்லையுடைய உணர்வு இரண்டையும் அந்த ஒளிப்பிரகாசத்திலேயே போட்டு ( எல்லைகளை) கரைத்துவிட எத்தனிக்கும்பொழுது,
மனது அவ்வளவு சீக்கிரம் ஒத்துவருவதில்லை. ஆனால், அதன் 'சுயம்' பலவீனமாக, ' எதையாவது தொடர்ந்து எண்ணிக்கொண்டேயிருப்பதை' நம்மால் அறிய முடிகிறது.
மனம் இந்த பழக்கதோஷத்தில் கட்டுப்பட்டு நிற்பது தெளிவாக தெரிகிறது. இந்த பழக்க தோஷத்தையே தனது சுயமாக மனம் எண்ணிக்கொண்டிருக்கிறதும் தெரியவருகிறது.
நடைமுறை வாழ்வில் நாம், மனதின் இந்த பழக்க தோஷத்தை படிப்படியாக குறைத்துக்கொண்டு வருதல் வேண்டும்.
தேவையில்லாது சதா எதையாவது எண்ணிக்கொண்டிருப்பதை குறைத்துக்கொண்டு வந்து, மன ஓட்டத்தைநிறுத்துதலும் வேண்டும்.

Wednesday, February 16, 2011

ஐம்புலன்களின் ஆதாரங்கள்.

கண்களின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

காதுகளின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

மூக்கின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

நாக்கின் நுகர்வு ஆதாரம் உணர்வில் அடங்கி இருக்கிறது.

இந்த தேகத்தின் ‘மேலோட்டமான’ நுகர்வு ஆதாரம் மட்டுமே உணர்வில் அடங்கி இருக்கிறது.


தேக உணர்வின் அடியாதாரம், உணர்வு நிலை கடந்த, அதிர்வு நிலையான உங்கள் மூலப்பிரகிருதியில் இருக்கிறது.


இந்த பிரகிருதியை நீங்கள் அநுபூதி நிலையில் மட்டும் காண முடியும். இந்த பிரகிருதி முழு ஒளி ரூபமானதும், முழு அதிர்வு தன்மையும் கொண்டதாக இருக்கிறது.


இந்தமூலப்பிரகிருதியின் ஆதாரம் ‘இங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்துள்ள அந்த ஆதிப்பிரகிருதியுள் அடங்கி இருக்கிறது.

வாழ்வின் சாரம்.

நாம், ஏற்கனவே இந்த வாழ்க்கையை நுகர்வது நமது உணர்வே என்று பார்த்தோம். உணர்வின் நுகர்வு தன்மை இக்கணம், இக்கணம் என இக்கணத்திலே நுகர்ந்து விடுதல் அவ்வளவே!

நுகரப்படும் உணர்வை சேமிக்கவும் முடிவதில்லை, அதில் மிச்சம் மீதி எதுவுமில்லை.

நேற்று முழுவதும் குதூகலாமாயிருந்தேன் என்பதில் இப்பொழுது எதுவும் சுவாரஸ்யமில்லை. எந்த பயனும் இல்லை. அது கடந்த ஒன்று. இதற்கு முன் நொடி உணர்ந்தது கூட 'கடந்த' ஒன்றுதான்.

அவ்வப்போது உணர்வது மட்டும் தானா? பின்பு வாழ்வின் சாரம் என்பது இவ்வளவுதானா? மிகவும் நகைச்சுவையான விஷயம் வாழ்வின் சாரமே இவ்வளவுதான்.

சரி இப்படி உணர்வதினால் நமக்கு என்ன கிடைக்கிறது? ஒன்றுமே கிடைப்பதில்லை. ( அவ்வப்போது சற்று 'சேர்ச்சை'யாக இருப்பது தவிர!. )

இந்த சேர்ச்சையில் திருப்தியடைவது யார்?

சந்தேகமென்ன மனம் தான். இது சேர்ச்சையாக இருக்கிறது என தீர்மானிப்பதும் மனமே.

மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. வாழ்க்கையே இவ்வளவுதானா?

மனிதனுக்கு மட்டுமல்ல, இங்கு வாழும் உயிர்களுக்கும் இதே நிலைமை தான். இந்த பூமியில் உள்ள உயிர் தொகுதிகளுக்கே இதுதான் நிலைமை. அவ்வப்போது உணர்ந்து விடுதல் அவ்வளவே!. மொத்த வாழ்வின் சராமுமே இக்கணத்தில் நிகழும் உணர்வு மட்டுமே!

சகோதரா, உன் பார்வையில் ஒரு நாய் பிழைப்புக்கு என்ன அர்த்தமோ , இம்மியும் மாறாமல் உன் வாழ்வுக்கும் அதேயளவுதான் அர்த்தம்.

அமாம்,

இந்த மனம், இந்த உணர்வு இரண்டை மட்டும் நம்பி ( இதுதான் வாழ்க்கை என ) வாழ்பவனுக்கு இதற்கு மேல் இந்த வாழ்வில் பொருளில்லை

Monday, February 14, 2011

நுகர்வு திறன்.

நமக்கு இந்த வாழ்க்கையை நுகர்வதற்கு ஐந்து புலன்கள் இருப்பது தெரியும். கண், காது, மூக்கு, நாக்கு, தேகம் . இந்த தேக உணர்வு என்பதை நாம் முழுமையாக உணர்ந்ததில்லை. கண் என்பது ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. காது என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி. மூக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.அதேப்போல நாக்கு என்பதும் ( அதனை சார்ந்த நரம்பு தொகுதி ) நமது உடலில் ஒரு பகுதி.ஆனால் தேகம் என்பது உடலில் ஒரு பகுதியல்ல. அது ஓர் முழுமை. நாம் இந்த தேக உணர்வு பற்றி தெளிவான அறிதல் இல்லாது இருக்கிறோம். இந்த தேகத்தால் குளிர், வெப்பம் , வலி, எரிச்சல் போன்ற உணர்வுகளைத்தான் உணர்ந்திருக்கிறோம். அந்த புலனை நுட்பமாக கவனிக்க தவறி விட்டோம். இந்த புலனை உபயோகிக்கவும் நமக்கு தெரிவதில்லை.

நாம் இந்த புலன்கள் எல்லாவற்றையுமே ஏதோ மேலோட்டமாகவே உபயோகித்து வந்துள்ளோம். இந்த ஐம்புலன்களும் நமக்கு ஐந்து கருவிகள். இந்த ஐம்புலன்களையுமே கூர்ந்து கவனிப்பதில்லை நாம். இந்த வாழ்க்கையை சிறப்புடன் வாழ, இந்த கருவிகளை விட சிறந்த ஓன்று கிடையாது. நம்மிடம் நுகர்வு திறன் மிக குறைவாகவே உள்ளது. ( நமக்கு குடும்பத்தில், சமூகத்தில் எவ்வளவோ பிரச்னை. இதற்கெல்லாம் நேரமில்லை.) கூர்மையான கவனத்தோடு இப்பிரச்னையை நாம் அணுகினால் அப்போது தெரியவரும் நாம் எவ்வளவு மெத்தனமாக, சோம்பேறியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது. நம்மிடம் இருக்கும் திறனையே நாம் அறியாது காலம கடத்தி வாழ்ந்து வந்துள்ளோம் . இந்த அறியாமை நம் வாழ்வில் ஏன் நிகழ்ந்துள்ளது தெரியுமா? இந்த ஐம்புலன்களுமே மனதுக்கு பின்னல் ஓடுவதால்தான் . இந்த ஐம்புலன்களைப்பற்றியுமே அந்த மனது தெரிந்து வைத்துள்ள அளவுக்கு - இந்த புலன்கள் தங்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லை. இந்த புலன்கள் தங்கள் நுகர் திறனை அறிய முயற்சிக்கவேண்டும்.

இந்த ஐம்புலன்களுக்கும் நாம் பயிற்சியளிக்க வேண்டும். அப்போது இந்த வாழ்வின் நுகர்வு தளம் வேறொரு உயர்ந்த பரிமாணத்துக்கு எடுத்து செல்லப்படும்.

Wednesday, February 9, 2011

அறியாமையை விட்டு நழுவதல்.

தியான நேரத்தில் நாம் நமது இரண்டு அறியாமைகளான 'நான்' எனும் மனம் மற்றும் 'எனது' எனும் உணர்வு இவை இரண்டிடமுமிருந்து நழுவுவது எப்படி என பார்ப்போம்.

இவை இரண்டுமே மாய சொரூபமானது.

இதிலிருந்து விடுபடும் வரை நமக்கு விமோசனம் கிடையாது.

அதற்கு சொந்த இருப்பு இல்லை. அது நிலையற்றது. அது உண்மை இல்லை. இக்கண விழிப்புணர்வின் ஒளிப்பிரதேசத்தில் நாம் இருக்கும்பொழுது 'நான்' எனும் வீட்டைவிட்டு, 'எனது' எனும் வாசல் கதவையும் தாண்டி அவைகளை விட்டு விலகி,- இப்போது மனத்தால் எதையாவது எண்ணுவதோ, உணர்வால் எதையாவது உணர்வதோ கூடாது. இரண்டையும் உதறிவிட்டு - வெளியில்வர

வெட்ட வெளியில் 'இருப்பு' இருப்பதை அந்த இருப்பே அறிந்துணரும்.

அந்த இருப்பில் தான் நாம் இருக்கிறோம். அங்கு எல்லைக்கு உட்பட்டது ஒன்றும் இல்லை. எல்லையற்ற இருப்பேயுள்ளது. இதுவே நாம் நமது இரண்டு அறியாமைகளை விட்டு நழுவும் உத்தி.

அகப்பயணம்.

நம்மில் மூன்றுவித தளம் செயல்படுவதாக பார்த்தோம். 1, மன-எண்ண தளம் 2, உடல்- உணர்வு தளம் 3, முற்றறிவு, முற்றுணர்வான- அநுபூதி தளம்.

நாம் மன எண்ண தளத்தில் நின்று இந்த மனம் என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த மனதின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என மனதால், எண்ணத்தால் ஆழ்ந்து சிந்திதோமானால், மனம் உணர்வின் மீதிருந்தே செயல்பட்டு வருவது தெரியும். மனதிற்கு ஆதாரம் உணர்வுதான். உணர்விலிருந்து எழுவதே எண்ணம், மனம்.

ஆக! மனதில் ஆழ்ந்து சஞ்சரித்தால் அது உங்களை உணர்விடம் சேர்த்து விடுகிறது.

இப்போது நீங்கள் உணர்வு தளத்தில் நின்று ஆழ்ந்து உணர துவங்கினால் முரணான உணர்வுகள் ஒருநிலைக்கு வந்து தேகம்முழுவதும் ஒருணர்வாக இக்கண உணர்வாக 'விழிப்புணர்வாக' நிலைக்கும். அப்போது, இந்த உணர்வு என்பது என்ன? அது எதில் நிலைபெற்றிருக்கிறது? இந்த உணர்வின் ஆணிவேர் எங்கிருக்கிறது? என்பதை உங்கள் உணர்வால்-விழிப்புணர்வால்- தேட துவங்கினால் அது உங்கள் மூன்றாவது தளமான அநுபூதி நிலையில் வேர் கொண்டிருப்பது தெரியவரும்.

உணர்வுக்கு ஆதாரம் அதிர்வுதான்.

உங்கள் விழிப்புணர்வு அழ்ந்து, அழ்ந்து நோக்க அது அதிர்வாக மாற்றமடைவது தெரியும். இந்த அதிர்வு உங்களிடம் மட்டுமல்ல ,

இந்த பிரபஞ்சமே இந்த அதிர்வுதான் என்பதையும் காண்பீர்கள்.

உங்கள் அதிர்வும், பிரபஞ்ச அதிர்வும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். அங்கு உணர்வு முற்றுணர்வாகவும் அறிவு முற்றறிவாகவும் துலங்கும்.

ஆக! ஆன்மீகம் என்பது அகப்பயணம். நீங்கள் உங்களுக்குள்ளே, உங்கள் மூலத்தை நோக்கி பயணித்து( inner self travel ) மூலத்தை கண்டறிவது.

இதில் உங்களுக்கு வெளியே உள்ள கடவுள், மதம், குரு இது எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டல்ல! கடவுள், மதம், குரு இவை மூன்றும் உண்மை அல்ல அவைகள் யாவும் ஒரு மாயையே!.

Sunday, February 6, 2011

ஒலியதிர்வு

நாம் தியானத்தின்போது நமது விழிப்புணர்வை - அதாவது இக்கணம், இக்கணம் எனும் இக்கண உணர்வை - அடையும் விதம் பற்றி பார்ப்போம். முதலில் நமது உடலிலுள்ள அனைத்து செல்களையும் உறக்கத்திலிருந்து விழிப்புக்கு கொண்டுவருதல் வேண்டும்.

எப்படியெனில் நாம் செய்யும் ஆழ்ந்த நாடி சுத்திக்கு பிறகு 'ம்' எனும் மகா மந்திரத்தை நாம் உச்சரிக்க துவங்கி, ஏற்ற இறக்கம் இல்லாது ஒரே சீராக உச்சரித்து, அந்த சப்தத்தை ஒரு லயத்துக்கு கொண்டுவந்து, அந்த சப்தத்தை ஊன்றி கவனிக்க ( அறிவால் அல்ல உணர்வால் ) அந்த சப்தத்தின் கால இடைவெளி குறைந்து,இக்கணத்துக்கு வரும். சப்தம் வெறும் அதிர்வாக இக்கண அதிர்வாக அதிர்வதை உணர முடியும். அந்த 'இக்கண அதிர்விலிருந்து துவங்கி, உடல் முழுவதும் உள்ள அனைத்து செல்களுக்கும் பரவ விட, அனைத்து செல்களும் இப்போது விழித்துக்கொள்ளும்.அனைத்து செல்களும் அதிர்ந்து ஒரே லயத்துக்கு வர , இப்போது உங்கள் உணர்வு முழுவது ஒரே அதிர்வாக அதிர்வது தெரியும்.அந்த அதிர்வுகளும் அலை அலையாக, அதிர்வலையாக எழுவது தெரியும்.

இப்போது உங்கள் 'உணர்வு தளம்' மனதின் பிடியிலிருந்து விலகி ஒரு சுதந்திர நிலைக்கு வந்திருப்பது தெரியும்.

உணர்வு முழுதும் ஒரே அதிர்வாக இருப்பது உணர்வு சுதந்திரம்.

இந்த நிலையே விழிப்புணர்வு நிலையாகும்.

Saturday, February 5, 2011

ஒரு தேவ ரகசியம்

நம்மோடு பின்னி பிணைந்துள்ள நமது இரண்டு அறியாமைகளான நான் எனும் மனம், எனது எனும் உணர்வு இந்த இரண்டையும் நாம் விலக்கிவிட , நமது தியான நேரத்தில் முயலும்போது, அந்த ஆழ்ந்த தியானப் பொழுதில் - அந்த ஈடுபாடு நம்மில் உண்மையாக நிகழ நாம் அனுமதிக்கும்பொழுது - நமது விட்டகுறை, தொட்டகுறையாக, நமது நான் எனும் அறியாமை அவ்வளவு எளிதில் நம்மை விடுவதில்லை.

உங்களின் உண்மையான ஈடுபாட்டுக்கும், உங்களின் நான் எனும் அறியாமைக்கும் நிகழும் இந்த போராட்ட கணங்களில் உங்களில் ஒரு தேவ ரகசியம் 'ஸ்புரிக்கும்'.

அந்த மகா இயற்க்கை உங்களுக்கு அளிக்கும் வரப்பிரசாதம் இது.

இதை என்னவென இவன் சொல்ல உரிமை இல்லை. அதை அவரவர் தியானங்களிலேயே அறிந்து கொள்ளவேண்டியது.

Friday, February 4, 2011

விழிப்புணர்வு

இந்த வாழ்வின் அடிப்படை சீர்திருத்தத்திற்கு,மற்றும்ஆன்மிகம் பற்றி அறிய 'நான்யார்?' எனும் கேள்வி எப்படி அடிப்படையாக அமைகிறதோ அதுபோல, அநுபூதி நிலைக்குள் நுழைய இக்கணம் எனும் விழிப்புணர்வு அடிப்படையாக அமைகிறது.

நீங்கள் இக்கணத்தில் மட்டும் சஞ்சரிக்க முடிந்தால், உங்களுக்கு எந்த மன,எண்ண ஓட்டங்களும் இராது. மன,எண்ண ஓட்டங்கள் நிகழ,இக்கணம் எனும் கால இடைவெளி போதாது.

நம் வாழ்வின் 'அடிப்படைஅறிவு' நான் யார்? என்கிற கேள்வி. நம் வாழ்வின் 'அடிப்படைஉணர்வு' இக்கணம் எனும் விழிப்புணர்வு.

இந்த விழிப்புணர்வுதான் அனுபூதி நிலையின் சாவித்துவாரம். இதுவே அறிவின் ஒடுக்கம், உணர்வின் ஒடுக்கம். அனைத்தும் ஒடுங்கி, ஓரிடமாயிருத்தல்.

இதையே சித்தர்கள் "வெம்மாயை அற்று;வெளிக்குள் வெளி கடந்து சும்மாயிருக்கும் சுகம்" என்றனர்.
உங்கள் தியான நேரத்தில் இதை கவனப்படுத்தி இக்கணத்திலே மட்டும் இருத்தி லயித்து நின்றால் - உங்கள் அடிப்படை தன்மையான அநுபூதி தன்மை திறக்கும்.

Monday, January 31, 2011

"எங்கும் நானே! எல்லாம் நானே!".

மூன்றுவித தன்மை நம்மில் செயல்படுகிறது. 1,( memory ) கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு கிடங்குகளில் பயணித்து , உங்களுக்கு ஏதுவானதை தீர்மானித்து , உங்களுக்கு எது பொருந்தும், எது பொருந்தாது என உங்கள் பழைய புராணங்களை, உங்கள் சரித்திரத்தை புரட்டிப்பார்த்து உங்களை இன்னும் இந்த பூமியில் தக்க வைத்திருப்பது , உங்கள் பூரண ஆயுளுக்கு வழி நடத்தும் 'மனம்' ஒன்று. ஓய்வும் கிடையாது.இது தன்னை சுயமென எண்ணிக்கொள்வது. இதற்கு உங்கள் ( இரண்டாவது தன்மையான ) உணர்வை மாற்றியமைக்கும் திறன் உண்டு.

2, ( live ) வாழ்வோடு மிக நேரடியாக தொடர்பு கொண்டு ( ரத்தமும் சதையுமாக ) சுக, துக்கங்களில் கலந்து வாழும் தேக உணர்வு மற்றொன்று.இது மிக உயிர்ப்பானது. இதற்கு இக்கணம் மட்டுமே. இந்த உணர்வில் நீங்கள் விழிப்புணர்வோடு நீடித்து லயிக்க முடிந்தால் ( உங்கள் மூன்றாவது தன்மையான அநுபூதி தன்மைக்கு வாசற்படியாக அமையும்.

3,( absolute ) இது பரிபூரண தன்மை வாய்ந்தது. காலம் எனும் கருத்தால் இது நிலையான காலம் என வருணிக்கலாம். அனைத்தும் இதனுள் அடக்கம். அதற்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை. இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் இதிலிருந்தே தோன்றி மறைகிறது. முன் கூறிய மன எண்ணங்களையும், உடல் உணர்வையும் கடந்து இதில் பிரவேசிக்க வேண்டியுள்ளது. முன் கூறிய இரண்டையும் விட்டு விட்டாலே நீங்கள் இங்குதான் இருப்பீர்கள். நமது மூல இருப்பே இங்குதான். நமது மூல இருப்பு மட்டும் அல்ல இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பும் இதுதான். இதற்கு எல்லையே இல்லை. இதில் நிலைக்கும் உங்களுக்கும் எல்லையே இருக்காது.

இதுதான் கிருஷ்ணா சொன்ன "எங்கும் நானே! எல்லாம் நானே!".

விழிப்புணர்வு என்பது பற்றிய ஒரு தகவல்.

ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் நேரடியாக திகழ்கிறது. அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலம் மட்டுமே அனுபவிக்க முடியும். “

நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும்.” என நாம் கவனித்தோம்.

உணர்வின் ஆழத்துக்கு நாம் போகும்பொழுது இக்கணம் மட்டுமே மிஞ்சி இருப்பதை காண்போம்.

இங்கு மனம் செயலற்று, ஒரு சாட்சித்தன்மையோடு மட்டுமே செயல்படும். மனம் செயல்பட, கால அவகாசம் தேவை. இக்கணம் எனும் குறுகலான கால இடைவெளியில் மனம் செயல்பட முடியாது. இவ்விடைவெளியில் உணர்வு மட்டுமே தன முழு பூரண தன்மையுடன் செயல்படும்.

மனம் – கடந்த, இறந்தகால நினைவுகளில் மட்டுமே ஈடுபட முடியும். அது உயிர்ப்புள்ள இக்கண நிகழ்வில் நேராக பங்கு ஏற்க முடியாது. மனதிடம் ஓர்மை கிடையாது. அது பல்நோக்குடையது. சந்தேகிப்பது. அதுஆராயும் தன்மையுடையது.

உணர்வால் மட்டுமே நேரடித்தொடர்பு கொள்ளமுடியும். அது ஒர்மையுணர்வு உள்ளது. அதற்கு பல்நோக்கு கிடையாது. அதற்கு எதையும் ஆராயும் விருப்பம் கிடையாது. சந்தேகம் கிடையாது. மிக நெருக்கமான நேரடியானது.

இதையே 'விழிப்புணர்வு' என சொல்லப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது உணர்வால் மட்டும் இக்கணத்தை, இருப்பை நுகர்வது. இக்கண உணர்வையே முன்னோர்கள் 'விழிப்புணர்வு' என சொல்லியிருக்கிறார்கள்.

உங்கள் உணர்வால் இக்கணத்தில் இருங்கள்.

இப்போது இருப்புணர்வைத்தவிர வேறெதுவும் இருக்காது. அ

துவே விழிப்புணர்வு.

அந்த விழிப்புணர்வே அநுபூதி நிலைக்கு வாசல்.

Wednesday, January 26, 2011

காலம் பற்றிய கருத்துக்கள்.

நமக்கு காலம் பற்றிய மூன்றுவிதமான கருத்துக்கள் உள்ளன. அவை முறையே

1, கடந்த காலம்,

2, நிகழ்காலம்,

3, நிலையான காலம்.

நாம் இதுவரை அறிந்திருப்பது இரண்டு மட்டுமே. ஆமாம் இந்த மூன்றாவதான நிலையான காலம் பற்றி நமக்கு அவ்வளவாக புரிதல் இல்லை. நாம் இன்னும் அங்கு பிரவேசிக்க்கவுமில்லை.

முதலாவதான கடந்தகாலம் நமது மனதில் நடக்கிறது. அவை இறந்த காலங்களின் நினைவுகள். ( மெமரி ) இவற்றை நமது மூளை செயல்படுத்துகிறது. கடந்த நொடிக்கூட இறந்த காலம்தான்.

இரண்டாவதான நிகழ்காலம் இக்கணம், இக்கணம் இப்பொழுது நடப்பது. இது நமது உணர்வில் நடப்பது. இது உயிர்ப்பானது. உயிரோட்டமிக்கது. இக்கணத்தை உணர்வாலேயே உணர முடியும். இக்கணத்தை, மனதாலாகிய அறிவு அதை தனது சோதனைக்கு உட்படுத்துவதற்க்குள் காலம் கடந்து விடுகிறது.நிகழ கணம் இறந்த கணமாகிவிடுகிறது.

அறிவு எதையும் சோதித்த பின்னரே ஏற்றுக்கொள்ளும்.

உணர்வு நேரடியானது.

மனம் சரிபார்த்த பின்பே ஏற்றுக்கொள்வது. மனதிற்கு சேமிப்பு உண்டு.

உணர்வுக்கு சேமிப்பு இல்லை.

உங்களுடைய 'நான்' கடந்த கால, இறந்த கால சவமாகி நாறிப்போன போன அந்த குப்பைகளின் சேமிப்பு கிடங்கிலேயே கால் ஊன்றி நிற்கிறது. உங்களுடைய 'நான்' தூக்கியெறியப்பட்ட குப்பைகளின் மீது அமர்ந்து அங்கு அழுகி, நாறிக்கிடக்கும் பொருட்களை அசைப்போட்டு உயிர்வாழும் நரி.

ஒரு உயிர்ப்புள்ள பூவின் மணம்போல இக்கணம் திகழ்கிறது.

அதை, அந்த உயிர்ப்பை நீங்கள் அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் உணர்வின் மூலமே அனுபவிக்க முடியும்.

மனதால் அதை அணுகக்கூட முடியாது.

Saturday, January 22, 2011

உணர்வின் செயல்தன்மை.

உணர்வுக்கு சுயம் இல்லை . சுயம் என்பது நினைவுத்தன்மை (memory)உள்ளதற்கு மட்டுமே உண்டு. உணர்வு என்பது நிலையான ஓன்று அல்ல! அது தொடர்ந்து மாறி, மாறி நடப்பது. கணத்துக்கு கணம் மாறுவது.

ஒரு வலியுணர்ச்சி ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்த உணர்ச்சியில் பலவித மாற்றங்கள் உண்டு. கணத்துக்கு கணம் அது மாறுகிறது. அந்த பலவிதங்களை ஒன்றாக்கி ஒரே வலியாக உங்களை உணர வைப்பது உங்கள் அறிவாகிய உங்கள் மனம்தான்.

உணர்வு பின்னமானது. முழுமையானது அல்ல. அந்த பின்னங்களை கூட்டிக்கூட்டி முழுமையாக்குவது உங்கள் மனம்தான்.

தவிர, உணர்வுக்கு பேதமில்லை. உணர்வு பேதங்களை கற்பிப்பது உங்கள் மனமே!

அனால் உணர்வே உங்கள் வாழ்வோடு நேரிடை தொடர்ப்பு உள்ளது.

அதற்கு நேரிடையாக இருப்பதை உணர மட்டுமே தெரியும்.

மிக முக்கியமான விஷயம் : உணர்வுக்கு நேற்று, இன்று, நாளை எனும் மூன்று காலங்கள் இல்லை.

இருப்பது இந்த கணம் மட்டுமே!.

மனமல்ல! உணர்வுதான் நீங்கள்.

மனம் உங்கள் உடலிலுள்ள ஒரு பகுதியான மூளையில் இருந்து மட்டுமே செயல்புரிகிறது. ஆனால், உணர்வோ உங்கள் உடல் முழுவதும் நின்று செயல்புரிகிறது.

மனம் உங்களின் ஒரு பகுதி. ஆனால் உணர்வோ உங்களின் முழுமை.

மனம் உங்கள் உடல் முழுவதிலுமுள்ள உணர்வோடு தொடர்பு வைத்திருக்கிறது. உங்கள் உணர்வை மனத்தால்( எப்படி வேண்டுமானாலும் ) நிர்வகிக்க முடியும்.

மனம் அதன் கட்டுப்பாட்டில், உங்கள் உணர்வை வைத்திருக்கிறது .

ஆனால் மனமோ நான் எனும் ஒரு 'மாயை'யில் சிக்கி இருக்கிறது. அதற்கு இந்த 'நான்' எனும் 'மாய சொரூபம்'ஏற்பட்டிருக்கிறது.

மனம் ‘சுயமாக’ தன கற்பனையில் ஒரு செயலை நிகழ்த்தி பார்த்தால், அந்த செயலுக்குண்டான உணர்வு மாற்றங்கள் உங்கள் உடலில் நிகழ்வதை உங்களால் காண முடியும்.
உங்கள் உணர்வு ஒரு அப்பிராணி. அதற்கு சுயமில்லை. அதற்கு எதுவும் தெரியாது. அது எடுப்பார் கைப்பிள்ளை.

ஆனால், அதுதான் நீங்கள். ஆமாம் இந்த வாழ்க்கையை நுகர்வது உங்கள் உணர்வுதான்.
மனமல்ல!

உணர்வுதான் நீங்கள்.

Thursday, January 20, 2011

பெற வேண்டியது எதுவுமில்லை. விட வேண்டியது அறியாமை மட்டுமே!.

நாம் மூன்று வித தன்மையில் இருக்கிறோம். ஒன்று :எண்ணங்களாகிய மனம். . இரண்டு: அனுபவித்தலான உணர்வு. மூன்று : அனைத்தையும் உள்ளடக்கிய( முற்றுணர்வு,முற்றறிவான ) பூரண நிலை.
இம்மூன்றும் ஒன்றாக இப்போது சேர்ந்து இயங்குகிறது. சராசரியாக இப்படித்தான் அனைவரும் இருக்கிறோம். இந்த மூன்றையும் பகுத்து அறிய, உணர நம்மால் முடிந்தால் நாம் நம்மை அறிந்தவராவோம்.

இந்த மூன்றும் கூட ஒரு அணுவைபபோன்று முத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

அணுவில் உள்ள எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மூன்றும் தனிதனித்தன்மையதாக இருக்க காண்கிறோம்.
எதிர்மின்-எலெக்ட்ரான், நேர்மின்-புரோட்டான், நிலைமின்-நியூட்ரான்.மின்னோட்டத்தின் மூன்று வித தன்மைகளாக இவைகள் இருக்கின்றது.

இவைகளும் முறையே நம்மில் எதிர்மின்-எலெக்ட்ரான்( வெளிநோக்கிய ) மனமாகவும்,, நேர்மின்-புரோட்டான்( தன்னையே நோக்கிய- தன் ) உணர்வாகவும், நிலைமின்-நியூட்ரான் (ஏக அறிவாகவும், ஏக உணர்வாகவும் ஒருங்கிணைந்து - முழுமையானதாக, பூரணமானதாக - ) பரிபூர்ண நிலையாக இருக்க காண்கிறோம்.

இதில் இரண்டு நிலைகள் அறியாமையை கொண்டுள்ளன. ஒன்று:மனம், மற்ற ஒன்று உணர்வு, ( அறியாமையான இரண்டும் ,ஓர் 'முழுமை'யாக(complete ) இல்லாது முழுமையின் 'பகுதிகளாக' இருப்பதால் தான் அறியாமையில் இருக்கின்றது.முழுமையடையாதது அறியாமை. முழுமையானது அறிவு. )

( குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது.)

இவைகளே முறையாக 'நான்'எனும் மனம், தான் எனும் உணர்வு. இவை இரண்டுமே!

இந்த மனம் எனும் அறியாமையும், உணர்வு எனும் அறியாமையும் நம்மை விட்டு நீங்கினால்!( நான், எனது எனும் அறியாமையை விட்டு நீங்கினால் )நாம் அந்த பரிபூர்ண நிலையை காண்போம்.

ஒரு அணுவினில் என்ன நிகழ்கிறதோ ! அதுவேதான் நம்மிலும் நிகழ்கிறது.

ஆக! நாம் தியானத்தின் மூலம், யோகாவின் மூலம் , அல்லது குருவின் மூலம் - வெளியிலிருந்து - நாம் 'பெற'வேண்டியது எதுவுமில்லை. நாம்- நம்மிடமிருந்து - 'விட' வேண்டியது, நம் அறியாமையை மட்டுமே. அறியாமையை விட்டாலே! பரிபூர்ண நிலை வாய்க்கும்.
நமக்கு வெளியிலிருந்து பெறவேண்டியது எதுவுமில்லை, விடவேண்டியது மட்டுமே நம்மிடம் இருக்கிறது.

ஓம் பூர்ணமத; பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவ சிஷ்யதே.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.

Thursday, January 13, 2011

நான் என்கிற தன்முனைப்பு மனதால் உண்டானதா? அல்லது உணர்வால் உண்டானதா?

இந்த கேள்வியை மட்டும் உங்களிடமே விட்டுவிடுகிறேன். நீங்களே யோசித்து பதிலை கண்டு பிடியுங்கள்.

Friday, January 7, 2011

இந்த வாழ்க்கையை நுகர்வோன் யார்?

நாம் எல்லோரும் வாழ்கிறோம். இந்த வாழ்க்கையை நுகர்வோன் யார்? சற்றும் தயங்காமல் " நான்தான் ' என்று சொல்லுகிறோம். உங்கள் வாழ்க்கையை நுகர்வது நீங்கள்தான். இன்னும் சற்று கூர்ந்து கவனமாக பாருங்கள். நுகர்வது உங்கள் மனமா?, உங்கள் உணர்வா? - உங்கள் எண்ணங்களா? உங்கள் உணர்வா?

இந்த வாழ்வை, வாழ்வின் விபரங்களை மனதால் அறியத்தான் முடியுமே தவிர நுகர முடியாது. ( அறிதல் என்பது நுகர்தல் ஆகாது ) ஆக! உணர்வுதான் இந்த வாழ்க்கையை நுகர்கிறது. அதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்காது.

இந்த உணர்வு சுயத்தன்மையுடையதா? அல்லது மனம் சுயத்தன்மையுடையதா?

மனம்தான் சுயத்தன்மையுடையது என்பது நமக்கு தெரியும். அது சுயமானதாக இருப்பதால்தான், நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எண்ணுகிறோம்,மனதில் எழும் எண்ணம்தான் நமது நடத்தையை மாற்றுகிறது. ஒவ்வொரு விதமாக செயல்படுகிறோம். இது நமது சுயத்தை திருத்தி செய்ய.

ஆக! மனம் சுயமுடையது. இதைத்தான் 'நான்' என்று கூறுகிறோம். நான் என்பது மனதின் செயற்பாடு.
உணர்வுக்கு சுயத்தன்மை கிடையாது. ஏனெனில் அதற்கு நினைவுத்தன்மை ( மெமரி ) கிடையாது. நினைவுத்தன்மையற்ற ஒன்று சுயமாக இருக்க முடியுமா?

உணர்வுஎன்பது அவ்வப்போது ( கணத்துக்கு கணம் ) உணர்ந்து விடுதல் அவ்வளவே!

ஆமாம் இந்த உணர்வு இடத்தில்தான் உங்கள் வாழ்வே நுகரப்படுகிறது. இப்போது சொல்லுங்கள் இந்த வாழ்க்கையை நுகர்வது யார்? சுயமுள்ள மனமா? சுயமற்ற உணர்வா?

தன்னையறிதல்

தன்னையறிதல் என்பது - தன்னை- இது என்ன? இது எப்படி செயல்படுகிறது? இந்த 'நான்' என்பது யார்? என்னை 'நான்' என்று எவ்விதம் அறிந்திருக்கிறேன்? இதன் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? இந்த 'நான்' எப்போது துவங்கியது? இது மாதிரி இன்னபிற கேள்விகளும் உங்களுக்கு உதித்தால்! - இந்த தன்னையறிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்கலாம்.

நமது வாழ்வு அகப்பரிமாணம், புறப்பரிமாணம் என நமது கவனக்குறைவால் இருவித பரிணாமமுடையதாக பிரிந்து கிடக்கிறது. வாழ்வும் இப்போது அக வாழ்வு, புறவாழ்வு என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. நமது புற வாழ்வை நமது மனம் பராமரித்து வருகிறது. நமது அக வாழ்வை நமது உணர்வு பராமரித்து வருகிறது. புறவாழ்வை மனம் பராமரித்து வந்தாலும், அதன் சாராம்சத்தை நமது உணர்வே எடுத்துக்கொண்டு வாழ்கிறது. ஆக! புறவாழ்வின் பயனும் நமது அகவாழ்விலேயே உணரப்பட்டு, வாழ்வின் மகத்துவமே அகவாழ்விலேதான் அடங்கிக்கிடக்கிறது என்பது கண்கூடு.

ஆக! ஒரு மனிதன் தன்னையறிய விரும்பினால் தனது உணர்வுகளை அறிதல் வேண்டும். உடம்பு எனும் ஸ்தூல செயல்பாட்டினை நிறுத்தி, ஐம்புலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி, மனதின் காட்சி பிம்பங்கள், மனதின் மொழி பிம்பங்களையும் , { மனதையே ) நிறுத்தி- படர்ந்து விரிந்து முரண்பட்டு அலையும் உணர்வையும் ஒரு பூஜ்யத்துக்கு கொண்டுவந்து,

உணர்வை ஒரு புள்ளியில் நிறுத்த

( எல்லா விருத்திகளும் அடங்கி ) உணர்வு ஒரே ஏக உணர்வாக மலரும். அந்த ஏக உணர்வு பூரணமானதாக இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்த பூர்ணம் அது.- 'தான்' -என்பதுவும் அதுவே! தன்னையரிதலும் இப்படியே!