Wednesday, August 25, 2010

த்யானம் என்பது

ஏற்கனவே கூறியபடி 'ஜடத்துக்குள் அறிவு நுழைந்ததாலேயே உயிர் உருவானது' என பார்த்தோம். நம்மிடம் மூன்று வித தன்மையுய்ள்ளது.1,ஜடம், 2,( ஜடமும் அறிவும் இணைந்ததாலேயான ) உயிர் இயக்கம், 3,தூய அறிவு நிலையான ' சாட்சித்தன்மை'. ஜடமும் அறிவும் இணைவதாலேயே உயிர் நடக்கிறது. உயிர் இயக்கத்திலிருந்தே 'மனம்' எழுகிறது. இந்த மூன்று தன்மையையும் பிரித்து பார்த்து , ( பொருட்களான ) ஜடத்தை, ஜட ( அசைவற்ற ) நிலையிலும், உயிரை ( மனதை ) ஒய்வு நிலையிலும், அறிவை வெறும் சாட்சித்தன்மையிலும், விடுவதே த்யானம் என்பது.

ஒரு கல்லைப்போல ஜடமான உடலை அசைவற்று நிறுத்தினால், உயிர் இயக்கம் ஒரு மேலான நிலையான அறிவு நிலைக்கு உயரும்.காரணம் நமது சாட்சித்தன்மைக்கு ( கவனத்திற்கு ) சிறிது உயிரோட்டம் தேவைப்படுகிறது. அந்த சிறு உயிரோட்டத்தில் மட்டும் நாம் நிற்கும்போது , இந்த பிரபஞ்சத்தின் மூல இருப்பு நிலையும், நமது இருப்பு நிலையும் ஒன்றாக இணைகிறது. இணைந்து லயமடைவதே த்யானம் என்பது.

Sunday, August 22, 2010

50:குறைவான வாழ்வும் நிறைவான வாழ்வும்.

பல பிறவிகள் தொடர்ந்தும் இன்னும் குறை தீரவில்லை நமக்கு. இப்போதும் நடைமுறை வாழ்விலும் தேடல் தொடர்கிறது. ஒரு உதாரணம். ஏன் நம்மை போன்ற சாமான்யரை கூட விடுங்கள். திருமதி சோனியா காந்தி போன்ற சர்வ அதிகாரம் கொண்ட நபர்களுக்கு கூட இன்னும் குறையை தீர்த்துக்கொள்ள முடியவில்லை. ( விஷயம் என்னவென்றால், நம்முடைய குறையை நாம் தவறாக அவதானிக்கிறோம் என்பதே )
எவ்வளவு பொருளாதாரம், எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் குறை தீர்வதில்லை.
இந்த வாழ்வு குறைவான வாழ்வுதான். நீங்கள் எவ்வளவு போராடினாலும் , எவ்வளவு உழைத்தாலும், ஏன் எவ்வளவுதான் பிறரை ஏமாற்றினாலும் இந்த குறை தீரப்போவதில்லை. இந்த வாழ்வு , நீங்கள் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் இன்னும் எதையோ தேடிக்கொண்டுதான் இருக்க வைக்கிறது. உங்களுக்கு தேவைகள் இருக்கும்வரை அது குறைவான வாழ்வுதான்.

பல பிறவிகளாக தொடர்ந்து வரும் ( இன்னும் தீராத ) குறை எது?

இதை நாம் அறிய முயற்சிப்பதில்லை. இதை அறிய முயற்சித்து அறிந்தவர்கள் அவர்களின் குறையை தீர்த்து நிறைவான வாழ்வை வாழ்கிறார்கள். இந்த வாழ்வை குறைவாகவே வாழ்வதா? நிறைவாக வாழ்வதா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Thursday, August 19, 2010

49 : கையகல வாழ்க்கை.

நான் என்பது ஒரு கருத்துரு மட்டுமே. அது ஒரு அபிப்ராயம். அது ஒரு அறியாமை. அது மனதினில் நடக்கும் ‘பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு செயல்பாடு’ மட்டுமே!

மற்றும் நான் என்பது 'ஒரு' உயிர் மட்டுமே அல்ல! நமக்குள் எழுபது லட்சம் கோடி 'தனி' உயிர்கள் இருக்கிறது. அவைகளை ஜீன் என்று அழைக்கிறோம். நான் என்பது ஓர் உயிர் தொகுப்பு. மனம் என்பது எழுபது லட்சம் கோடி ஜீன்களின் ஒரு பொது அமைப்பு. அந்த எழுபது லட்சம் கோடி ஜீன்களும் அதுவது ஜீவிக்கும் இடத்தைப்பொறுத்து அதனதன் பிரச்னைகள் பலவாறு வேறு வேறாக இருக்கிறது. அதன் சிந்தனையும் தேவையும் வேறு வேறாக இருக்கிறது. இதனாலேயே உங்கள் மனம் சதா ஏதாவது ஒன்றில் சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜீனின் தவிப்பையும், உணர்வையும் உங்கள் மூளை வாசித்துக்கொண்டே இருக்கிறது.

நமது மனம் எவ்விதம் செயல்படுகிறது என்பதை கவனிப்போம். மனம் மூளையை கருவியாகக்கொண்டு செயல் புரிகிறது. அந்த மூளையோ உடலிலுள்ள ஜீன்களோடு மட்டும் ( ஜீன்களின் உணர்வுகளோடு ) நேரிடையான தொடர்பு கொண்டிருக்கிறது. இந்த ஜீன்களின் உணர்வுகள்தான் உங்கள் ஒட்டுமொத்த வாழ்வின் சாரமும் ஆகும். உங்கள் புகழ், உங்கள் கௌரவம் , உங்கள் அந்தஸ்து இன்னபிறவும் இந்த வெறும் உணர்வுமட்டுமேயாகும்.உங்கள் வாழ்வுக்கு அர்த்தம் இவ்வளவு மட்டுமே!
இதற்கு வெளியில் நடப்பதெல்லாம்( நீங்கள் எண்ணுவது ) வெறும் பொய் மட்டுமே! உங்கள் வாழ்க்கையோ கேவலம் இப்படி கையளவேயாகி சுருங்கி கிடக்கிறது. உங்கள் தேடலோ பல பிறவிகளாக அகண்டு விரிந்து எல்லைகளற்று கிடக்கிறது. எதை தேடி உங்கள் வாழ்வு பல பிறவிகளை தாண்டி வந்திருக்கிறது? இன்னும் திருப்தியுறாத ஒன்று என்ன? எது திருப்தியுராததால் பல பிறவிகள் கடந்து வந்தீர்கள்? இந்த கையகல உணர்வுதான்.
ஆமாம் இந்த கையகல உணர்வு திருப்தியுறாமல் தான் பல பிறவிகள் கடந்தீர்கள். இந்த பிறவி,மனித பிறவி 'இந்த அறிவை'அறியும் பிறவி.