Sunday, February 20, 2011

இனி மரணம் உனக்கில்லை.

மரண பயம் இல்லாத மனிதரில்லை என்கிற அளவுக்கு இந்த மரண பயம் நம்மை தொற்றிக்கொண்டுள்ளது. இங்கிருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் ஒரு நாள் நான் தான் இறந்து 'இல்லாது' போய்விடுவேன் என்கிற அச்சம் நமக்கிருக்கிறது. இந்த இல்லாது போவது என்பது நமது மனதுக்கும், உணர்வுக்குமே பொருந்தும். இந்த 'நான்' ஐ இருப்பதாக பாவித்து வருபவை இவை இரண்டுமே!

மரணத்துக்கு பிறகு இல்லாது போவது இவை இரண்டுமே!.உண்மையிலேயே இல்லாமல் இருப்பவைதான் இவை.( நான் என்பது ஒரு அறியாமை. தான் இருப்பதாக ஒரு மாயா சொரூபத்தை நம்புவது.அதில் உண்மையோ , நிதர்சன்மோ இல்லை.அது மனதின் புனைவு. )

மனதின் புனைவும், மனம் சார்ந்த உணர்வின் புனைவும்கடந்த, தியான வெளியில் என்ன உள்ளதோ அதுவே உண்மை. அது நிலையானது.

உன் உடலை விட்டு உயிர் நீங்கியபின் , உன் உடலையும் எரித்து சாம்பலை கரைத்து விட்ட பின் மீதம் என்ன இருக்கிறதோ ( தியான வெளியில் என்ன உள்ளதோ ) அதுவேஉண்மை. அது எப்போதும் உள்ளது. நிலையானது. அதற்கு ஆதியில்லை, அந்தமுமில்லை.

தியானத்தில் உனது அறியாமைகளை நீ கடந்து இதில் பிரவேசித்து விட்டால், உனக்கு மரணமில்லை. இந்த மரணம் எதில் நிகழுமோ அதையே ( அறியாமை ) தொலைத்து விட்ட பின், இனி மரணம் எங்கு நிகழும்?

யதோதகம் சுத்தே சுத்தம் ஆஸிக்தம் தாத்ருகேவ பவதி /
ஏவம் முனேர் விஜானத ஆத்மா பவதி கௌதம //15// - ( கடோபநிஷத். )

பதவுரை : தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்ற மகான் ஆன்ம வடிவமாகவே ஆகிறார்.

1 comment: