Tuesday, March 15, 2011

முண்டக உபநிஷத்தில் ஒரு பாடல்.

ப்ரணவோ தணு: சரோ ஹ்யாத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே /
அப்ரமத்தேன வேத்தவ்யம் சரவத் தன்மயோ பவேத் // 4 //

ஒளிமயமான பிரம்மத்தை அடைவது என்பதை வில்லில் நாண் ஏற்றி, இலக்கை வீழ்த்துவதற்கு ஒப்பிட்டு இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. முதலாவதாக
நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும். அடுத்து அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும். இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

வில் : ஓங்கார மந்திரம்
நாண் : மனம்
அம்பு : உணர்வு
இலக்கு : ஒளிமயமான பிரம்மம்.

இதில் ஒவ்வொரு கட்டமும் முக்கியமானவை.

1, நாணை வில்லில் இழுத்து கட்டவேண்டும்.

மனதை அந்த ஓங்காரத்தில் நிலை நிறுத்துதல் வேண்டும். உங்கள் மனமே முழுவதும் ஓங்காரமாக திகழ வேண்டும். உங்கள் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஓம் ஓம் என ஒரே லயத்தில் உச்சரிக்க வேண்டும். மனம் ஓங்காரத்தில் கரைந்து அத்தனை செல்களும் ஓங்காரத்தில் அதிர வேண்டும். ஒட்டுமொத்த நீங்களும் வெறும் ஓங்காரமாகமட்டும் இருக்க வேண்டும்.

2, அம்பு மிக கூர்மையானதாக இருக்கவேண்டும்.

உணர்வை ஒன்று திரட்டுதலே அம்பாக இருக்கிறது. உணர்வு ஆழமானஅதன் ஆழ்நிலையான இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக இருக்கவேண்டும். இன்னும் ஆழ்ந்து அதிர்வாக,- உங்கள் அனைத்து செல்களும் இதே உணர்வாக, இதே அதிர்வாக -அதிர்வில் ஒர்மையாக துல்லிய தன்மை( கூர்மை ) இருக்க வேண்டும்.


3, அம்பை நாணில் வைத்து குறி பார்க்கவேண்டும்.

முதுகு தண்டு நேராக வைத்து நிமிர்ந்து அமர்ந்து, உணர்வு இக்கணம், இக்கணம் எனும் விழிப்புணர்வாக (இலக்கு) பிரம்ம தாகமாக உருவாகி, முதுகு தண்டின் அடிப்பகுதியான மூலதாரத்திலிருந்து புருவ மத்தியை ( பிரம்ம துவாரம் - ஆக்ஞா ) நோக்கி பொருத்துதல் வேண்டும்.

4, இலக்கும் அம்பும் ஒரே நேர்க்கோட்டில் வந்தபிறகு

வலிமையாக பலத்தை ஒன்றாக திரட்டி,சற்றும் பிசகாமல் ஒரே கவனத்துடன், இலக்கை நோக்குதல் வேண்டும். ஓம் எனும் வில்லை வளைப்பதின் மூலம், வில்லுக்கு கட்டுக்கடங்காத விசை உருவாகிறது - ஓம் எனும் சொல்லை தொடர்ந்து லயமாக உச்சரிக்க, உச்சரிக்க இந்த மந்திர ஓசையுணர்வு உங்கள் உடல் முழுவதும், அதிர்வை உண்டாக்கி உங்கள் மனத்துக்கு,உணர்வுக்கு ஒரு ஓர்மை நிலையை தருகிறது. இந்த ஓர்மை நிலையே இலக்கின் நேர்கோடு என்பது.

5, அம்பை பின்னால் இழுத்து எய்ய வேண்டும்.

மனம் ஓம் என்ற ஒசையதிர்வில் லயித்து, தன் சுபாவம் விட்டு ( தன் சுபாவம் என்பது எப்பொழுதும் வெளி நோக்கி செயல்படுவது. வெளியில் தன்னை சுற்றி நடக்கும் அனைத்து செயல்களிலும் தனது நினைவு தொகுப்பை சதா ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேயிருப்பது. ) உணர்வோடு கலந்து உணர்வுக்கு உந்து சக்தியை தருகிறது.
.
உணர்வு இப்போது தனது 'மேலான' இலக்கு நோக்கி பாய எத்தனமாக இருக்கிறது. வில்லின் விசையும், தன் அறியாமையை விலக்கிய மனமும் உணர்வின் மேலான கூர்ந்த நோக்கும் ஒர்மையாக ஓர் செயலாக இணைந்திருப்பதை காண்கிறோம். இந்த செயலில் உள்ள ஒவ்வொரு அணுவுமே இலக்கை நோக்கியே செயல்பட தயாராக இருக்கிறது.

6, இப்போது நாணிலிருந்து அம்பு விடுபட்டால் நோக்கம் நிறைவுறும்.

அதாவது நமது சராசரி வாழ்வில் மனமும் உணர்வும் இணைந்தே செயல்பட்டு வருகிறது . பெருமூளை நமது நினைவகமாக இருக்கிறது. மனம் பெரு மூளையை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. உணர்வை மனம் தனது வசம் வைத்திருக்கிறது. தண்டுவடம் அனிச்சை செயல்களை கவனித்துக்கொள்கிறது.

அம்பு இப்போது பாயப்போகிறது.

அது நாணின் விசையை கொய்துக்கொண்டு பாய்ந்துவிடும். அம்பும் நாணின் விசையும் அந்த பிரம்மத்தில் சங்கமித்து விடும்.

அதாவது நான் எனும் மனதின் அறியாமையும், எனது எனும் மனதுக்கு கட்டுப்பட்ட உணர்வு கற்றைகளும் அந்த ஒளி பிரம்மத்திடம் சமர்ப்பிக்கப்பட்டால், எங்கும் நீக்கமற பிரம்மம் - பிரம்மம் மட்டுமே -திகழுவதை காணலாம்.

2 comments:

  1. நண்பர் தனிக்காட்டு ராஜா அவர்களுக்கு வணக்கம். உங்கள் 'கமாண்டில்' தகவல் எதையும் காணவில்லை!

    .

    ReplyDelete