Wednesday, October 6, 2010

உணர்வுலகம்.

ஆளரவமற்ற ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங்கள். எந்தவித இரைச்சலும் இல்லாத இடமாக இருக்கட்டும். ஒரு மணி நேரம் கண்களை மூடி உங்களுக்குள் நடக்கும் உணர்வோட்டத்தை மட்டும் கவனியுங்கள். நடுக்கடலில் அலைகள் எழுந்து, எழுந்து விழுவது போல உங்கள் உணர்வில் சிறு ஏற்ற, இறக்கம் மட்டுமே காண முடியும். பின்பு அதில் ஒரு லயம் ஏற்படும். உணர்வின் அடிப்படைத்தன்மையே இதுதான். தொடர்ந்து கவனித்து வாருங்கள். முக்கியமான ஒரு விஷயம், இதை அறிவால் அறியக்கூடாது. உங்கள் உணர்வாலேயே உணருங்கள். உங்களுணர்வு நகர்தலை உங்கள் உணர்வாலேயே உணருங்கள். இப்போது காண்பீர்கள் உங்கள் மனம் அமைதியடைதிருப்பதை. ஆச்சரியமாகத்தான் இருக்கும் இது.
இந்த உணர்வுலகு ஒரு இசைக்கருவி மாதிரி. இயல்பாக இதில் கேட்பது அதன் சுருதி லயம் மட்டுமே! உங்கள் மனம் அதை மீட்டுவதாலேயே அதில் பல் வேறு ராகங்களை ஏற்படுத்துகிறது. எந்த வித குற்றம் குறையும் இல்லாதது உங்கள்உணர்வுலகு. எவர் ஒருவரால் இதில் தொடர்ந்து சுருதி லயத்தை மட்டுமே கேட்க முடிகிறதோ ( மீட்ட முடிகிறதோ ) அவர் எளிதில் மனதை கடக்கும் உபாயத்தை அறிகிறார்.

No comments:

Post a Comment